30-1-11 தினமலர் - செய்திமலர் நெல்லைப் பதிப்பில் வெளியான கட்டுரை விவசாய வளர்ச்சி என்பது…? நா ட்டின் உற்பத்தித் தேவையை நிறைவு செய்ய, மற்றுமொரு பசுமைப்புரட்சி தேவை என்று குடியரசு தினத்தை முன்னிட்டு, நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் குடியரசுத்தலைவர் குறிப்பிட்டு இருப்பது, இயற்கை வேளாண் ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. வேலை இல்லாத்திண்டாட்டத்தை ஒழிப்போம்….. வறுமையை விரட்டுவோம். …. தீவிரவாதத்தை வேரறுப்போம்….. பொருளாதார வளர்ச்சியில் இரண்டு இலக்கப் புள்ளியை எட்டுவோம்… கடந்த அறுபது ஆண்டுகளாக பொதுப்புத்தியில் உரைய வைக்கப்பட்டுள்ள இது போன்ற ஏகோபித்த பிரகடனங்களை, சுதந்திர தினம், குடியரசு தினம் போன்ற நாட்களில் குடுயரசுத்தலைவரோ, பிரதமரோ நாட்டு மக்களுக்கு ஆற்றும் உரையில் வெளியிடுவது ஒரு சடங்காக நீடித்து வருகிறது. அவற்றில் ஒன்றுதான் பசுமைப்புரட்சி தேவை என்று குடியரசுத்தலைவர் பிரதீபா பாட்டீல் தெரிவித்துள்ள புளித்துப் போன பழங்கருத்தும். அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு, உணவு உறுதித் திட்டத்தை விரிவு படுத்தும் முயற்சி… என உற்பத்தி சார்ந்த பல்வேறு நெருக்கடிக...