அவர்கள் காத்திருக்கிறார்கள்! “ஆ வீன மழைபொழிய இல்லம்வீழ..! அகத்தடியாள் மெய்நோவ அடிமை சாக..! மாவீரம் போகுதென்று விதைகொண்டோட..! வழியிலே கடன்காரன் மறித்துக் கொள்ள..! சாவோலை கொண்டொருவன் எதிரே தோன்ற..! தள்ளவொணா விருந்துவர சர்ப்பந்தீண்ட..! கோவேந்தர் உழுதுண்ட கடமை கேட்க..! குருக்கள் வந்து தட்சணைகள் கொடு என்றாரே..!!!” உழுதுண்டு வாழ்பவனின் அன்றாட வாழ்க்கை நெருக்கடியை, சித்தரிக்கும் விவேகசிந்தாமணி என்ற பழந்தமிழ் நூல் பாடல் வரிகள்தான் இவை. சம்சாரி என்றும் குடியானவன் என்றும் அந்நாட்களில் அழைக்கப்பட்ட ஏழை விவசாயி ஒருவனுக்கு, ஒரே நேரத்தில் நேரும் துயரங்கள்தான் எத்தனை? ‘மாடு கன்று போடுகிறது. அடை மழையோ கொட்டுகிறது. அந்த மழையால், குடியிருந்த வீடும் இடிந்து விழுகிறது. மனைவி திடீரென நோய்வாய்ப்படுகிறாள். உதவிக்கு இருந்த வேலையாளும் திடீரென இறந்து போகிறான். இத்தனை நெருக்கடிக்கு இடையேயும், மழை பெய்த ஈரம் காயுமுன்னே விதைத்துவிட வேண்டும் என்ற பதற்றத்துடன், விதையை எடுத்துக் கொண்டு வயலுக்கு ஓடுகிறான் அந்த விவசாயி. வழியிலே கடன்காரன் வந்து மறித்துக் கொள்கிறான். அதோடு முடிந்த...