19.12.2010 தினமலர் - செய்திமலர் (நெல்லைப் பதிப்பு) ல் வெளியான கட்டுரை ஜனநாயகத்தின் சண்டாளர்கள்! அ லைவரிசை ஒதுக்கீட்டுப் புகாரை முன்னிறுத்தி நடத்தப்பட்ட அதிரடி சோதனைகளை, வட இந்திய ஊடகங்கள், ஆங்கிலமா ஹிந்தியா என அடையாளம் கண்டறிய முடியாத வினோதமொழியில், விலாவாரியாகக் கடைவிரித்துக் கொண்டிருந்தன. அந்த ஜனநாயக சங்கடத்தைப் பார்த்த படியே நாளேட்டைப் புரட்டிய போது கண்ணில் பட்ட மற்றொரு செய்தி, அத்தகைய சங்கடத்தை மேலும் அதிகப்படுத்தியது. மகாராஷ்டிரா மாநிலத்தின் விதார்பா மாவட்ட விவசாயிகளுக்கு அப்போதையை முதலமைச்சரே இழைத்த கொடுமை குறித்து, உச்சநீதிமன்றம் தெரிவித்த கண்டனம் தொடர்பான செய்திதான் அது. விதார்பா மாவட்டத்தை அத்தனை சீக்கிரம் யாரும் மறந்திருக்க முடியாது. 1997 முதல், 2008ம் ஆண்டு முடிய சுமார் பத்து ஆண்டுகளில், அந்த மாவட்டம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதியைச் சேர்ந்த 2 லட்சத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் கடன் தொல்லை தாங்காமல் தற்கொலை செய்து கொண்டனர். மனித வரலாற்றிலேயே, குறிப்பிட்ட ஒரு பிரச்சனை தந்த அழுத்தத்தால் இத்தனை பேர் தற்கொலை செய்து கொண்ட நிகழ்வு நட...