(9.11.11 தினமலர் செய்திமலர் நெல்லைப் பதிப்பில் வெளிவந்த கட்டுரை) விரக்தியின் விளிம்பில்… நா ட்டில் விவசாயத்தைத் தொழிலாக கொண்டவர்களில் 45 சதவீதம் பேர் இந்தப் பிழைப்பே வேண்டாம் என்று நொந்து போய்ச் சொல்லுவதாக, பசுமைப் புரட்சியின் தந்தை என்று பாராட்டப்படும் தேசிய விவசாயிகள் ஆணையத்தின் தலைவர் எம்.எஸ். சுவாமிநாதன் அண்மையில் தெரிவித்துள்ளார். ஆந்திர மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள ஆச்சார்யா என்.ஜி. ரங்கா விவசாயப் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்ட அவர், மாணவர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த போது இதனைக் கூறியுள்ளார் (Business Line, Dec – 30, 2010). எம்.எஸ். சுவாமிநாதன் தெரிவித்திருப்பதாலேயே இந்தக் கருத்து, பலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. தந்தையாக இருந்து அவர் பெற்றெடுத்த பசுமைப் புரட்சி குறித்து, பல்வேறு கருத்து வேறுபாடுகள் உண்டு. எனினும், இந்திய விவசாயத்துறை சார்ந்து, அதற்கான அதிகாரத்தளங்களில் இடம்பெற்று இயங்கி வருபவர் என்ற அளவில், விவசாயத்தின் நிலை குறித்து அவர் தெரிவிக்கும் கருத்துகள் முக்கியத்துவம் வாய்ந்தவை என்பதை மறுப்பதற்கில்லை. விவசாயம் குறித்த நவீன கருதுகோள்கள் அடை...