காத்திருப்பு வரிபிறழ்ந்த எழுத்துக்களைப் போல் வானில் பறந்து செல்லும் புறாக்களின் கால்களில் எனக்கான ஒலை எதுவும் இல்லை... எத்தனையோ ஓலைகள் அனுப்பியதாகச் சொல்லுகிறார்கள் எதுவும் வந்து சேரவில்லை சேதிக்காகக் காத்திருந்த காலம் எனைச் சுற்றிலும் புற்றாக வளர்கிறது நாக்கைத் துருத்தித் துளாவியபடி அதிலிருந்து வெளியேறி நீளும் பாம்புகளுடன் குடியிருக்கப் பழகிவிட்டேன் சுற்றிவளைக்கும் பாம்புகளின் மிருதுத்தன்மையில் உடலும் மனமும் சுகம் கொள்கின்றன