ஊழலை ஒழிப்பது எப்படி? ஊ ழலை ஒழிப்பது எப்படி? மணிமேகலைப் பிரசுரம் வெளியிடும் புத்தகத்தின் தலைப்பைப் போல் இருக்கிறதே என்று பார்க்கிறீர்களா? ஊழலுக்கு எதிராக தற்போது எழுந்துவரும் குரல்கள், வலிமையான அரசியல் அடித்தளத்துடன் கிளர்ந்தெழ வேண்டிய அந்த போராட்டத்தை, இப்படித்தான் மலினப்படுத்திக் கொண்டிருக்கின்றன. ஆனால், அறுபது ஆண்டுகால சுதந்திர இந்திய வரலாற்றில், அனைத்து அடித்தட்டு குடிமக்களின், அடிமனதில் ஓயாத அலையாக எழும்பி, எழும்பி ஓயும் இந்தக் கேள்விக்கு இதுவரை விடை கிடைக்கவில்லை என்பதே உண்மை. நேருகாலத்தில் நாட்டையே கலக்கிய முந்திரா ஊழல் தொடங்கி, தற்போதைய 2ஜி அலைக்கற்றை, மற்றும் இஸ்ரோ ஊழல் வரை அடி, முடி காண முடியாத மர்ம முடிச்சுகளுடன், ஊழல் எனும் அந்த விசித்திர மிருகம், வெற்றிகரமாக தனது பயணத்தை நடத்திக் கொண்டிருக்கிறது. வலிமை வாய்ந்த ஜனநாயகத்தால் ஏன் இந்த மிருகத்தை வீழ்த்த முடியவில்லை? ஊழல் எனும் பெருங்குற்றத்தை, அரசியல் கட்சிகள் எப்படியெல்லாம், தங்களது எதிரிகளைப் பழிவாங்குவதற்கான சந்தர்ப்ப ஆயுதமாக பயன்படுத்தி வந்திருக்கின்றன என்பதை கூர்ந்து கவனித்தால், இந்த வரலாற்றுத் தோல்விக்கான காரணம் புரிய...