(2.1.11 தினமலர் - செய்திமலர் நெல்லைப் பதிப்பில் வெளிவந்தது) ஏறுவது விலை மட்டுமல்ல ! க டந்த வாரம் முழுவதும், வெங்காயமும், தக்காளியும் அகில இந்திய அளவில் ஊடகங்களின் முக்கியப் பாடுபொருளானது. அவற்றின் கற்பனைக்கெட்டாத விலை உயர்வு, நாட்டின் அடித்தட்டு மக்கள் முதல், ஆளுவோர் வரை அனைவரையும், ஒரு பூகம்பத்தைப் போல நடுங்க வைத்துவிட்டது. ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு குறித்துப் பேசிய பிரமுகர் இப்படிச் சொல்கிறார்… “முன்பெல்லாம் வீட்டு மனை பற்றிப் பேசும்போது செண்ட் கணக்கில் பேசுவார்கள். இப்போது சதுர அடிக்கணக்கில் தான் கூற முடிகிறது. அது போலவே கத்திரிக்காய், தக்காளி, வெங்காயம் போன்ற காய்கறிகளை இனி கடையில் சென்று கிலோ கணக்கில் கேட்கவோ வாங்கவோ முடியாது. 100 மிலி கிராம், 50 மிலி கிராம் என்ற அளவில் மட்டும் தான் கேட்க முடியும் போல….” அன்றாட அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு குறித்த சாமான்யர்களின் பேரதிர்ச்சியையே அவரது இந்தக் கருத்து பிரதிபலிக்கிறது. வெங்காயத்தின் விலை உயர்வை ஒட்டி எழுந்த எதிர்ப்பைப் ப...