இலங்கையில் இந்த மாதம் 15ம் தேதி தொடங்கி 17ம் தேதி வரை நடைபெற இருக்கும் காமன்வெல்த் மாநாட்டில் [Commonwealth heads of government (Chogm) ] பிரதமர் மன்மோகன்சிங் பங்கேற்ககக் கூடாது என்று மூன்றாவதாக ஒரு மத்திய அமைச்சரும் சொல்லி விட்டார். முதலில் ஜி.கே. வாசன். இரண்டாவது நாராயணசாமி. மூன்றாவதாக ஜெயந்தி நடராஜன். காமன்வெல்த் மாநாட்டில் பிரதமர் பங்கேற்பதற்கு எதிராகத் தமிழகத்தில் இருந்து எழும் மற்ற குரல்களை எல்லாம் விட, இவர்களது குரல்கள் முக்கியமானவை என்பதை நாம் சொல்ல வேண்டியதில்லை. இதே கோரிக்கையை வலியுறுத்தி, தமிழக சட்டப்பேரவையில் ஒரு மனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட போது, வெளியுறவுத்துறை சார்ந்த முடிவுகளில் மாநில அரசுகளின் தலையீடும், நெருக்கடியும் இருக்கக் கூடாது என்று சிலர் முணுமுணுத்ததைப் பார்க்க முடிந்தது. தற்போது வெளியுறவுக் கொள்கையைத் தீர்மானிக்கும் மத்திய அரசின் அங்கமாக இருக்கும் அமைச்சர்களே அதனை வலியுறுத்தும் போது அத்தகைய முணுமுணுப்புகள் இயல்பாகவே அடங்கிப் போவதில் வியப்பில்லை. தமிழகத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர்களின் தமிழர்கள் மீதான இந...