புதிய பதிவு.... மணல் எனும் மண்ணுயிர்… ம ணல்…. மனித இனத்தின் தொன்மைகள் அனைத்தையும் உள்வாங்கியபடி, பரந்தும், விரிந்தும், ஒடுங்கியும், வளைந்தும் நதியின் போக்கில் படிந்து கிடக்கும் காலத்தின் சுவடு. நதிகளின் வழியாகத்தான், மனித இனம் தன் நாகரிகத்தையும், பரிணாம வளர்ச்சியையும் தகவமைத்துள்ளது. ஆற்றங்கரையில் அமர்ந்து நண்பர்களுடன் அளவளாவிய அனுபவம் உள்ளவர்களால் மட்டுமே, மணலுக்கும், மனிதர்களுக்கும் உள்ள நுட்பமான உறவையும், அது கிளர்த்தும் உணர்வையும் புரிந்து கொள்ள முடியும். மனிதர்களுக்கும், நதிக்கும் இடையே உயிர்ப்பிணைப்பாக பின்னிக்கிடக்கும் மணல், தற்போது கட்டுமானப் பொருட்களில் ஒன்றாக மட்டுமே மதிக்கப்படுவதுதான் சோகம். இல்லாவிட்டால், மணல் கொள்ளை என்பது, போதைப் பொருள் கடத்தல், குழந்தைகள் கடத்தல், கூலிக்காக ஆட்களைக் கொல்லுதல் போன்றவற்றை எல்லாம் விட, குண்டர்களின் ஆதிக்கம் மிகுந்த கொலைத் தொழிலாக உருவெடுத்திருக்க முடியுமா? மணல் திருட்டைத் தடுக்கச் சென்ற அதிகாரிகளை மட்டுமே லாரி ஏற்றிக் கொன்றது பழைய நடைமுறை. இப்போதெல்லாம், எதிரில் யார் வந்தாலும், மோதிக் கொன்று ந...