1944ம் ஆண்டு சேலத்தில் நடைபெற்ற மாநாட்டின் தொடர்ச்சியாக, 1945ம் ஆண்டு மே மாதம் திருச்சியில் நடைபெற்ற மாநாட்டில் “தென்னிந்திய நல உரிமைச் சங்கம்” என்ற பழைய பெயர், திராவிடர் கழகமாக மாற்றமடைந்தது. அதில்தான் “சென்னை மாகாணமான திராவிட நாடு, சமுதாயம், பொருளாதாரம், தொழில்துறை, வியாபாரம் ஆகியவற்றில் பூரண சுதந்திரமும், ஆதிக்கமும் பெற வேண்டும்” என்பது உள்ளிட்ட வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. திராவிடர் கழகத்தின் வளர்ச்சியைப் போலவே, பெரியார், அண்ணாவுக்கு இடையேயான முரண்பாடுகளும் அதிகரித்துக் கொண்டே போயின. 1944ம் ஆண்டு பிப்ரவரி மாதம், டி.கே.சண்முகம் குழுவினரால் ஈரோட்டில் “தமிழ் மாகாண நாடகக் கலை அபிவிருத்தி மாநாடு” நடத்தப்பட்டது. இந்த மாநாட்டைக் கண்டித்து குடியரசு ஏட்டில் பெரியார் கடுமையான கருத்துகளை வெளியிட்டிருக்கிறார். அண்ணாவோ அந்த மாநாட்டில் கலந்து கொண்டு பாராட்டுரையும், சிறப்புரையும் ஆற்றி இருக்கிறார். அடுத்தபடியாக திராவிடர் கழகத்தினர் கருப்புச் சட்டை அணிய வேண்டும் என்ற பெரியாரின் வலியுறுத்தலிலும், அண்ணாவுக்கு கருத்து பேதம் இருந்துள்ளது. “தென்னி...