(நடப்பு.காம் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டது) 1 988 ஆம் ஆண்டுக்குப் பின்னர், அதே கட்சியில் அதே காட்சிகள் அரங்கேறி வருகின்றன. அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம். 1972ஆம் ஆண்டு, திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட எம்.ஜி.ஆர், கருணாநிதி என்ற தனிமனிதருக்கு எதிராக, அவரை வசைபாடி இசை பெறுவதற்காகவே தொடங்கப்பட்ட கட்சி. அன்றைய மத்திய அரசின் அச்சுறுத்தலுக்கு அஞ்சி, பின்னர் அதை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமாக பெயர் மாற்றம் செய்தார் எம்.ஜி.ஆர். ஆக, அஇஅதிமுக என்பது கொள்கை முரணால் பிறந்த கூரிய கருத்தியலை அடிப்படையாக கொண்ட இயக்கமல்ல. தனிமனித காழ்ப்பால் மட்டுமே பிறந்த வாக்குவேட்டைக் கட்சி அது. கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக, கருணாநிதி எதிர்ப்பாளர்களுக்கு வாளாகவும், கேடயமாகவும் பயன்பட்டு வரும் மலிவுவிலை அரசியல் ஆயுதம் என்பதே, அதிமுகவின் உண்மையான அடையாளம். அன்றைய இடதுசாரிகள், அதற்குப் பின்னால் வந்த வைகோ, அதற்குப் பின்னர் பழ.நெடுமாறன், தற்போது சீமான், வேல்முருகன் போன்றோர் என அதிமுக ஆதரவாளர்களின் பட்டியல் நீண்டு கொண்டே செல்வதன் அடிப்படையும் அதுதான்...