Skip to main content

ஏறுவது விலை மட்டுமல்ல!


(2.1.11 தினமலர் - செய்திமலர் நெல்லைப் பதிப்பில் வெளிவந்தது)

 ஏறுவது விலை மட்டுமல்ல !


டந்த வாரம் முழுவதும், வெங்காயமும், தக்காளியும் அகில இந்திய அளவில் ஊடகங்களின் முக்கியப் பாடுபொருளானது.

அவற்றின் கற்பனைக்கெட்டாத  விலை உயர்வு, நாட்டின் அடித்தட்டு மக்கள் முதல், ஆளுவோர் வரை அனைவரையும், ஒரு பூகம்பத்தைப் போல நடுங்க வைத்துவிட்டது.

ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு குறித்துப் பேசிய பிரமுகர் இப்படிச் சொல்கிறார்…

“முன்பெல்லாம் வீட்டு மனை பற்றிப் பேசும்போது செண்ட் கணக்கில் பேசுவார்கள். இப்போது சதுர அடிக்கணக்கில் தான் கூற முடிகிறது. அது போலவே கத்திரிக்காய், தக்காளி, வெங்காயம் போன்ற காய்கறிகளை இனி கடையில் சென்று கிலோ கணக்கில் கேட்கவோ வாங்கவோ முடியாது. 100 மிலி கிராம், 50 மிலி கிராம் என்ற அளவில் மட்டும் தான் கேட்க முடியும் போல….”
அன்றாட அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு குறித்த சாமான்யர்களின் பேரதிர்ச்சியையே அவரது இந்தக் கருத்து பிரதிபலிக்கிறது. 

வெங்காயத்தின் விலை உயர்வை ஒட்டி எழுந்த எதிர்ப்பைப் பார்த்து மிரண்டு போன மத்திய அரசு, இறக்குமதிக்கான வரியை முழுமையாக ரத்து செய்து, ஏற்றுமதிக்குத் தடைவிதித்து… பல்வேறு பகீரதக் குட்டிக்கரணங்களைப் போட்டு, ஓரளவுக்கு விலையைக் கட்டுப்படுத்தியது.
ஆனாலும், விலையைத் தரைமட்டத்திற்கு குறைத்து விட முடியவில்லை.

மழையால் பாதிப்பு, இறக்குமதி குறைந்தது… என விலை உயர்வுக்குப் பல காரணங்கள் சொல்லப்பட்டன. அவையெல்லாம் முழுமையான காரணங்கள் அல்ல என்பது மக்களுக்கும் தெரியும். அவர்களின் பிரதிநிதிகளுக்கும் தெரியும்.

விலை உயர்வு என்பது,  வாக்குவங்கியைப் பாதிக்கக் கூடிய பிரச்சனையாக இருப்பதால், அரசியல் கட்சிகள் இந்த விவகாரத்தில் பதற்றம் காட்டுகின்றன. இல்லாவிட்டால் இது பற்றியெல்லாம் அவர்கள் பெரிதாக கண்டு கொள்ளப்போகிறார்களா என்ன?

எப்படியோ, விலை உயர்வுப் பிரச்சனையை, நாடு தழுவிய விவாதப் பொருளாக மாற்றியதற்காக, வெங்காயத்திற்கும், தக்காளிக்கும் நன்றி சொல்லியே ஆகவேண்டும்.

சரி.

காய்கறிகளின் விலை இந்த அளவு உயரும்போது, அதனால் விவசாயிகளுக்கு ஏதாவது லாபம் கிடைக்கிறதா? அவர்களது வாழ்க்கைத் தரத்தில் ஏதாவது முன்னேற்றம் தெரிகிறதா?

இல்லவே இல்லை என்கிறது அண்மையில் வெளிவந்துள்ள தேசிய குற்ற பதிவு அமைப்பின் (National Crime Records Burea – NCRB) புள்ளி விவரம்.
கடந்த 2009ம் ஆண்டில் மட்டும் 17 ஆயிரத்து 368 இந்திய விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டதாக, அந்தப் புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. வழக்கம் போல, மகாராஷ்டிரா மாநிலம் அதிக அளவிலான விவசாயிகள் தற்கொலை செய்து கொண்ட மாநிலம் என்ற ‘பெருமை(?)யை’த் தக்கவைத்துக் கொண்டுள்ளது.

கடந்த ஆண்டு, அந்த மாநிலத்தில் மட்டும் 2 ஆயிரத்து 872 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

விவசாயிகளின் தற்கொலை எண்ணிக்கை அதிகம் உள்ள ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா, மத்திய பிரதேஷ் மற்றும் சத்தீஸ்கர் ஆகிய 5 மாநிலங்களில் மட்டும் கடந்த ஆண்டு, 10 ஆயிரத்து 765 விவசாயிகள் தற்கொலையால் மடிந்துள்ளனர். இது அந்த ஆண்டின் மொத்த தற்கொலை எண்ணிக்கையில் 62 சதவீதம் ஆகும் என தேசிய குற்றப்பதிவு அமைப்பின் புள்ளி விவரம் கூறுகிறது. 
அதற்காக தமிழகத்தின் நிலவரமும் ஆறுதல் தரக்கூடியதாக இல்லை. கடந்த 2008ம் ஆண்டு 512 ஆக இருந்த தமிழக விவசாயிகளின் தற்கொலை எண்ணிக்கை, 2009ம் ஆண்டில் 1060 ஆக, அதாவது இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது.
இந்திய அளவில், கடந்த 1997ம் ஆண்டு தொடங்கி, 2009ம் ஆண்டு முடிய 12 ஆண்டுகளில் 2 லட்சத்து 16 ஆயிரம் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக, தேசிய குற்றப்பதிவு அமைப்பு தெரிவிக்கிறது.
அதாவது, கடந்த 2009ம் ஆண்டு நிகழ்ந்துள்ள தற்கொலை எண்ணிக்கைப் படி, 30 நிமிடங்களுக்கு ஒரு விவசாயி இந்தியாவில் தற்கொலை செய்து மடிகிறார் என மதிப்பிடப் படுகிறது.

குறிப்பிட்ட ஒரு பிரச்சனையின் அழுத்தம் காரணமாக இத்தனை பேர் கொத்துக் கொத்தாக தற்கொலை செய்து கொள்வது, மனித வரலாற்றில் எங்கும், எப்போதும் நிகழாத ஒன்று என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.
இந்திய விவசாயத்தின் வளர்ச்சி, இந்த லட்சணத்தில்தான் தற்போதும் இருந்து வருகிறது.

“நாட்டில் விவசாயம் செய்பவர்களின் எண்ணிக்கை குறைந்து வந்தாலும், அந்தத்துறையைப் பாதிக்கக் கூடிய பிரச்சனைகள் என்னவோ அதிகரித்துக் கொண்டுதான் உள்ளன” என்கிறார், இந்திய விவசாயிகள் தற்கொலை குறித்து விரிவான ஆய்வுகளை நடத்தி முடித்துள்ள பொருளாதார வல்லுநர் கே. நாகராஜ்.

உண்மைதானே! ஒரு பக்கம் காய்கறிகளின் விலை உயர்கிறது. அதே நேரத்தில் தற்கொலை செய்து கொள்ளும் விவசாயிகளின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. அப்படி என்றால் விலை உயர்வால் லாபம் அடைபவர்கள் யார்? பொருட்களுக்கான விலையைத் தீர்மானிப்பவர்கள் யார்? 

விவசாயிகளின் உற்பத்திப் பொருட்களுக்கு உரிய விலை கிடைத்தால், அவன் குறைந்த பட்சம் தற்கொலை செய்து கொள்ளாமல் உயிரோடு இருந்து, அடுத்த தேர்தலுக்கு வாக்களிக்கவாவது பயன்படுவான் தானே? அதற்காகவாவது இந்தப் பிரச்சனையின் உண்மையான மூல வேரைக் கண்டு பிடித்து அறுத்தெறிய அரசியல் கட்சிகள் முயலலாமே?

இன்று வரை குக்கிராமங்களில் விளையும் தோட்டக் காய்கறிகளை, வியாபாரிகள் அதிகவிலை கொடுத்து வாங்குவதில்லை. அதே காயை அருகில் உள்ள சிறு நகரக்கடையில் போய், அதே விவசாயி வாங்க நேரிட்டால், பல மடங்கு அதிக விலை கொடுத்து வாங்க வேண்டியதிருக்கும்.
களைய முடியாத இந்த முரண்பாட்டுக் களை எப்படி மண்டியது? இதன் மூல வேர் எங்கிருந்துதான் புறப்படுகிறது?

இந்திய மக்கள் தொகையில் 70க்கும் மேற்பட்ட சதவீத்தினராக இருந்து வரும், விவசாயப் பெருங்குடி மக்களுக்கு இன்று வரை விடைகிடைக்காத கேள்வி இதுதான்.

உள்ளூர் வியாபாரிகளின் பதுக்கலுடன், வெளிநாட்டு நிறுவனங்களின் பகடையாட்டமும் இப்போது சேர்ந்து கொண்டதால், விலை உயர்வு என்பது பரம்பத ஆட்டம் போல் தொடர்கிறது.

இந்தியாவின் விவசாயம் சார்ந்த கொள்கை முடிவுகளில் மாற்றத்தை மேற்கொள்வதற்கு, தெற்காசிய மற்றும் ஐரோப்பிய நாடுகளுடன் செய்து கொண்டுள்ள தாராள மய வணிக ஒப்பந்தம் (Free Trde Agreement) பெரும் தடையாக இருப்பதாக, பொருளாதார வல்லுநர்கள் கூறுகிறார்கள்.

இதனால் அவசியமற்ற பொருட்களை இறக்குமதி செய்வதும், அவசியமான பொருட்களை ஏற்றுமதி செய்வது மான முரண்பாடான நடைமுறை, மத்திய அரசால் தொடர்ந்து கடைப்பிடிக்கப் பட்டு வருவதாகவும் அவர்கள் தெரிவிக்கிறார்கள்.

ரோம் நகரமே பற்றி எரியும் போது, அமைதியாக பிடில் வாசித்துக் கொண்டிருந்த அந்நாட்டு மன்னனை, பல முறை நினைவுபடுத்தும் மத்திய விவசாயத்துறை அமைச்சர் சரத்பவாரின் முரண்பட்ட பேச்சுக்கும் போக்குக்குகம் வேறு என்ன காரணம் இருக்க முடியும்?

வரி ரத்து, ஏற்றுமதிக்கு தற்காலிகத் தடை என்ற விலைக்குறைப்பு நாடகமெல்லாம், தேர்தலுக்கு வேண்டுமானால் பயன்படலாம். விவசாயத்தையும், விவசாயிகளையும் தேரவைக்கப்ப பயன்படாது.

காலத்துக்கு ஏற்ற உள்நாட்டு உற்பத்தியை வலுப்படுத்தும் புதிய விவசாயக் கொள்கைகள் வகுக்கப்பட வேண்டும். அவை விவசாயத்தையும், விவசாயிகளையும் முன்னிறுத்தி, அவர்களுக்கு குறைந்த பட்ச உத்தராதங்களை அளிக்கக் கூடியவையாகவும் இருக்க வேண்டும்.

விலை உயர்வு என்ற வலிக்கு, வெறும் தற்காலிக நிவாரணி மாத்திரைகள் தேவையில்லை. அதன் அடிப்படையான ஆணிவேரைக் கண்டு அறுத்தெறியும் ரண சிகிச்சை தேவை. அதற்கு விவசாயத்தை வளப்படுத்தி, பலப்படுத்துவது ஒன்றுதான் நிரந்தரத் தீர்வாக இருக்க முடியும்.

மேனா.உலகநாதன்

Comments

Popular posts from this blog

நெருடல் ----------------------------------------------------------------------- அவரைப் பார்த்தும் பாராதவனாய்த் திரும்பிக் கொண்டேன் பார்க்காமல் போகிறார் என்பதைப் பார்க்காமல் பார்த்திருக்கலாம்தான் கேள்வியும் பதிலும் உள் நெருடியது பார்த்தும் பாராமையை பார்த்தும் பாராமல் சென்ற அவரின் பக்குவம் பார்த்தும் பாராத நான்.   மேனா. உலகநாதன்

அரசியல் பேசுவோம் -14 – அண்ணா நிகழ்த்திய அரசியல் வேதிவினை! : செம்பரிதி

1962ம் ஆண்டு மார்ச் 15ம் தேதி காமராஜர், மீண்டும் தமிழகத்தின் முதலமைச்சரானார். பக்தவச்சலம், கக்கன் உள்ளிட்டோர் அவரது அமைச்சரவையில் இடம்பெற்றனர். திருச்செங்கோடு இடைத்தேர்தலில் திமுக பெற்ற வெற்றி மாநில காங்கிரசாரை மட்டுமின்றி, மத்தியில் உள்ளவர்களையும் மலைக்க வைத்தது. விளைவு பிரிவினை கட்சிகளை சட்டவிரோத இயக்கமாக அறிவிக்கும் மசோதாவை காங்கிரஸ் அரசு நிறைவேற்றியது. நாடாளுமன்றத்தில் அதனை அண்ணா எதிர்த்துப் பேசினாலும், மசோதா நிறைவேற்றத்தைத் தடுக்க முடியவில்லை. அடுத்த கட்டமாக பிரிவினைத் தடைச்சட்டத்தை எதிர்கொள்வதற்கான வியூகத்தை வகுகக் வேண்டிய நெருக்கடி அண்ணாவுக்கு ஏற்பட்டது. கட்சியினரைத் தனித்தனியாகவும் ,அமைப்பு ரீதியாகவும், குழுக்களாகவும் அழைத்து பிரிவினைத் தடைச்சட்டம் குறித்து ஆலோசனை நடத்தினார் அண்ணா. கட்சியின் அடிப்படை விதிகளில் ஒன்றாக இருந்த திராவிடநாடு கோரும் பிரிவைத் திருத்த வேண்டிய நிலை ஏற்பட்டிருப்பதை அவர்களுக்கு எடுத்துரைத்தார். முடிவாக 1963ம் ஆண்டு நவம்பர் மாதம் கட்சியின் செயற்குழுவைக் கூட்டினார். அதில் திராவிட நாட்டை வலியுறுத்தும் கட்சியின் 2வது விதி திருத்தப்பட்டது. “தமிழகம...
நன்றாகவே…. சில மௌனங்கள் பல புறக்கணிப்புகள் பாடம் நடத்தியபடியே நகர்கிறது காலம். இலையுதிர்கால மரத்தில் இருந்து உதிரும் உயிர்த்துளி வெள்ளமெனப் பெருகிப் பரவ துளிர்க்கும் பசித்த மானுடம் வசந்தம் சூல்கொள்ளும் பூக்களின் தேன் துளி விஷமெனக் கரைந்து கொல்லும் விதி எனும் கற்பிதத்தை வீழும்போதே எழும் எமது வீறுதனில் மோதிச்சிதறும் அவர்தம் உன்மத்தம் எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது. மேனா.உலகநாதன்