Skip to main content
எனது 20 களில் கவியரங்கம் ஒன்றிற்காக 
எழுதப்பட்ட தமிழ் வாழ்த்து  

அண்டம் பிறக்குமுன் ஆளப்பிறந்ததால் அகிலத்தில் பழமையானாய் - இன்று
கண்டவர் எழுதியும் கலைநயம் மிளிர்வதால் புதுமைக்கும் புதுமையானாய்
என்றோ பிறந்த நீ இன்றும் இளமையாய் இருப்பதும் மாயமன்றோ – ஆழி
கொண்டும் அழிந்திடா குன்றாப் புகழினால் கொண்டபேர் நிலைக்குமன்றோ!

முன்பு வளர்ந்தனை மூவகைச் சங்கத்தில் முத்தமிழ்ச் செல்வமென்றே – உந்தன்
மூன்று குழந்தைகள் ஆண்ட பெருமையை முழங்கடி வந்து நின்றே
அள்ளும் சிலம்பிலே வள்ளுவன் வாயிலே துள்ளுமுன் இளைய மேனி – பண்டை சொல்லும் அழகிலே சுவையின் வனப்பிலே வெல்லும் நீ மொழியில் ராணி!

எண்ணத்திரையிலே ஏதோ கிறுக்கினாய் வண்ணங்கள் புரியவில்லை – எந்தன்
இதயக் கதவினை எதுகொண்டு தட்டினாய் இன்னும் உறங்கவில்லை
கன்னக் கதுப்பினில் கதைபல சொன்ன என் காதலி மறக்க வைத்தாய் – அவள்
கலவியில் பிரிவினில் கண்டு மயங்கிய போதையை மாற்றிவிட்டாய்

சின்னக் குழந்தையின் சித்திரம் போலொரு சன்ன ஒளிக்கீற்றாய் – என்னுள்
மின்னிச் சிரித்திடும் மின்மினிக் கூட்டமாய்க் கண்ணைச் சிமிட்டி நின்றாய்
உள்ளக் கருத்தினில் உன்னை இருத்தினேன் என்னை நடத்திடுவாய் - உந்தன்
வெள்ளக் கருத்தினை மெள்ளப் புகட்டவே பிள்ளைச் சங்கை எடுப்பாய்!

மேனா.உலகநாதன்

Comments

Popular posts from this blog

நெருடல் ----------------------------------------------------------------------- அவரைப் பார்த்தும் பாராதவனாய்த் திரும்பிக் கொண்டேன் பார்க்காமல் போகிறார் என்பதைப் பார்க்காமல் பார்த்திருக்கலாம்தான் கேள்வியும் பதிலும் உள் நெருடியது பார்த்தும் பாராமையை பார்த்தும் பாராமல் சென்ற அவரின் பக்குவம் பார்த்தும் பாராத நான்.   மேனா. உலகநாதன்

அரசியல் பேசுவோம் -14 – அண்ணா நிகழ்த்திய அரசியல் வேதிவினை! : செம்பரிதி

1962ம் ஆண்டு மார்ச் 15ம் தேதி காமராஜர், மீண்டும் தமிழகத்தின் முதலமைச்சரானார். பக்தவச்சலம், கக்கன் உள்ளிட்டோர் அவரது அமைச்சரவையில் இடம்பெற்றனர். திருச்செங்கோடு இடைத்தேர்தலில் திமுக பெற்ற வெற்றி மாநில காங்கிரசாரை மட்டுமின்றி, மத்தியில் உள்ளவர்களையும் மலைக்க வைத்தது. விளைவு பிரிவினை கட்சிகளை சட்டவிரோத இயக்கமாக அறிவிக்கும் மசோதாவை காங்கிரஸ் அரசு நிறைவேற்றியது. நாடாளுமன்றத்தில் அதனை அண்ணா எதிர்த்துப் பேசினாலும், மசோதா நிறைவேற்றத்தைத் தடுக்க முடியவில்லை. அடுத்த கட்டமாக பிரிவினைத் தடைச்சட்டத்தை எதிர்கொள்வதற்கான வியூகத்தை வகுகக் வேண்டிய நெருக்கடி அண்ணாவுக்கு ஏற்பட்டது. கட்சியினரைத் தனித்தனியாகவும் ,அமைப்பு ரீதியாகவும், குழுக்களாகவும் அழைத்து பிரிவினைத் தடைச்சட்டம் குறித்து ஆலோசனை நடத்தினார் அண்ணா. கட்சியின் அடிப்படை விதிகளில் ஒன்றாக இருந்த திராவிடநாடு கோரும் பிரிவைத் திருத்த வேண்டிய நிலை ஏற்பட்டிருப்பதை அவர்களுக்கு எடுத்துரைத்தார். முடிவாக 1963ம் ஆண்டு நவம்பர் மாதம் கட்சியின் செயற்குழுவைக் கூட்டினார். அதில் திராவிட நாட்டை வலியுறுத்தும் கட்சியின் 2வது விதி திருத்தப்பட்டது. “தமிழகம...
நன்றாகவே…. சில மௌனங்கள் பல புறக்கணிப்புகள் பாடம் நடத்தியபடியே நகர்கிறது காலம். இலையுதிர்கால மரத்தில் இருந்து உதிரும் உயிர்த்துளி வெள்ளமெனப் பெருகிப் பரவ துளிர்க்கும் பசித்த மானுடம் வசந்தம் சூல்கொள்ளும் பூக்களின் தேன் துளி விஷமெனக் கரைந்து கொல்லும் விதி எனும் கற்பிதத்தை வீழும்போதே எழும் எமது வீறுதனில் மோதிச்சிதறும் அவர்தம் உன்மத்தம் எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது. மேனா.உலகநாதன்