Skip to main content
சுடுகாட்டில் வீசும் தென்றல்

நிண நாற்றம்
சகிக்க முடியவில்லை
நடு நிசி நாய்களின்
குரூர வேட்கையும்தான்

ஊழல் தீயின் தகிப்பில்
கனன்றடங்கிச் சாம்பலாகிறது
ஜனநாயகத்தின் ஒவ்வொரு
உயிர்த்துளியும்

சுடுகாட்டில் வீசும்
தென்றலாக தேர்தல்

விரிந்த ‘கை’கள்
இப்போது
கூப்பியபடி தமிழர்களிடம்
வாக்கு கேட்டு…

ஈழரத்தம் ருசித்த
மூவண்ண நாவுகளுக்கு
இன்னும் அடங்கவில்லை
தமிழ்க் குருதி
வேட்கை

தமிழர்களின் அரசியலை
பிரித்துப் போட்டு
கலைத்து விளையாடி
ரசித்துச் சிரிக்கிறாள்
டெல்லி மோகினி

சுவைக்காத மாங்கனி
சீற்றம் தணிந்த சிறுத்தை
சாட்டை இழந்து
ஓரமாய்ச் சரிந்த
பம்பரம் என

தமிழ்க் கூறுகள்
அனைத்தும்
தன்னளவில்
நீர்த்துப் போனது
கண்டு அவளுக்கு
தாழவில்லை
பெரு மகிழ்ச்சி


இங்கோ
ராஜாஜிக்குப் பிறகு
தம் குலத்துக்குக் கிடைத்த
தலைமை போய்விடுமோ
என்று பதறும்
மற்றொரு கூட்டம்….

போதையில் தள்ளாடியபடி
புரட்சி பேசி
முரசு கொட்டும்
முட்டாள் நடிகர்

அவர் மூலமேனும்
பொதுவுடைமை
மலருமா
என ஏங்கித்தவிக்கும்
இலக்கிலா இடதுகள்….

பிரபலமான கோமாளிகள்
என்ற பேரில்
நாத்தழும்பேறப் பேசும்
வடிவேல்களாம்
அரசியல் ஈசல்கள்

தண்ணீரைவிட ரத்தம்
கெட்டியானது என
ஸ்ரீ ரங்கத்துச்
சொந்தங்களிடம்
தஞ்சமடைந்துவிட்ட
எதிரணித் தலைவி….

வியூகம் வகுத்த பீஷ்மரோ
இப்போது அம்புப் படுக்கையில்
துரோகங்களுக்கு மன்னிப்பு ஏது?

வரலாறு தாட்சண்யமற்ற
தன் தீர்ப்பை
எழுதத் தொடங்குகிறது.


செம்பரிதி


நன்றி : தாகம் இதழ்

Comments

Popular posts from this blog

நெருடல் ----------------------------------------------------------------------- அவரைப் பார்த்தும் பாராதவனாய்த் திரும்பிக் கொண்டேன் பார்க்காமல் போகிறார் என்பதைப் பார்க்காமல் பார்த்திருக்கலாம்தான் கேள்வியும் பதிலும் உள் நெருடியது பார்த்தும் பாராமையை பார்த்தும் பாராமல் சென்ற அவரின் பக்குவம் பார்த்தும் பாராத நான்.   மேனா. உலகநாதன்

அரசியல் பேசுவோம் -14 – அண்ணா நிகழ்த்திய அரசியல் வேதிவினை! : செம்பரிதி

1962ம் ஆண்டு மார்ச் 15ம் தேதி காமராஜர், மீண்டும் தமிழகத்தின் முதலமைச்சரானார். பக்தவச்சலம், கக்கன் உள்ளிட்டோர் அவரது அமைச்சரவையில் இடம்பெற்றனர். திருச்செங்கோடு இடைத்தேர்தலில் திமுக பெற்ற வெற்றி மாநில காங்கிரசாரை மட்டுமின்றி, மத்தியில் உள்ளவர்களையும் மலைக்க வைத்தது. விளைவு பிரிவினை கட்சிகளை சட்டவிரோத இயக்கமாக அறிவிக்கும் மசோதாவை காங்கிரஸ் அரசு நிறைவேற்றியது. நாடாளுமன்றத்தில் அதனை அண்ணா எதிர்த்துப் பேசினாலும், மசோதா நிறைவேற்றத்தைத் தடுக்க முடியவில்லை. அடுத்த கட்டமாக பிரிவினைத் தடைச்சட்டத்தை எதிர்கொள்வதற்கான வியூகத்தை வகுகக் வேண்டிய நெருக்கடி அண்ணாவுக்கு ஏற்பட்டது. கட்சியினரைத் தனித்தனியாகவும் ,அமைப்பு ரீதியாகவும், குழுக்களாகவும் அழைத்து பிரிவினைத் தடைச்சட்டம் குறித்து ஆலோசனை நடத்தினார் அண்ணா. கட்சியின் அடிப்படை விதிகளில் ஒன்றாக இருந்த திராவிடநாடு கோரும் பிரிவைத் திருத்த வேண்டிய நிலை ஏற்பட்டிருப்பதை அவர்களுக்கு எடுத்துரைத்தார். முடிவாக 1963ம் ஆண்டு நவம்பர் மாதம் கட்சியின் செயற்குழுவைக் கூட்டினார். அதில் திராவிட நாட்டை வலியுறுத்தும் கட்சியின் 2வது விதி திருத்தப்பட்டது. “தமிழகம...
நன்றாகவே…. சில மௌனங்கள் பல புறக்கணிப்புகள் பாடம் நடத்தியபடியே நகர்கிறது காலம். இலையுதிர்கால மரத்தில் இருந்து உதிரும் உயிர்த்துளி வெள்ளமெனப் பெருகிப் பரவ துளிர்க்கும் பசித்த மானுடம் வசந்தம் சூல்கொள்ளும் பூக்களின் தேன் துளி விஷமெனக் கரைந்து கொல்லும் விதி எனும் கற்பிதத்தை வீழும்போதே எழும் எமது வீறுதனில் மோதிச்சிதறும் அவர்தம் உன்மத்தம் எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது. மேனா.உலகநாதன்