சுடுகாட்டில் வீசும் தென்றல்…
நிண நாற்றம்
சகிக்க முடியவில்லை
நடு நிசி நாய்களின்
குரூர வேட்கையும்தான்
ஊழல் தீயின் தகிப்பில்
கனன்றடங்கிச் சாம்பலாகிறது
ஜனநாயகத்தின் ஒவ்வொரு
உயிர்த்துளியும்
சுடுகாட்டில் வீசும்
தென்றலாக தேர்தல்
விரிந்த ‘கை’கள்
இப்போது
கூப்பியபடி தமிழர்களிடம்
வாக்கு கேட்டு…
ஈழரத்தம் ருசித்த
மூவண்ண நாவுகளுக்கு
இன்னும் அடங்கவில்லை
தமிழ்க் குருதி
வேட்கை
தமிழர்களின் அரசியலை
பிரித்துப் போட்டு
கலைத்து விளையாடி
ரசித்துச் சிரிக்கிறாள்
டெல்லி மோகினி
சுவைக்காத மாங்கனி
சீற்றம் தணிந்த சிறுத்தை
சாட்டை இழந்து
ஓரமாய்ச் சரிந்த
பம்பரம் என
தமிழ்க் கூறுகள்
அனைத்தும்
தன்னளவில்
நீர்த்துப் போனது
கண்டு அவளுக்கு
தாழவில்லை
பெரு மகிழ்ச்சி
இங்கோ
ராஜாஜிக்குப் பிறகு
தம் குலத்துக்குக் கிடைத்த
தலைமை போய்விடுமோ
என்று பதறும்
மற்றொரு கூட்டம்….
போதையில் தள்ளாடியபடி
புரட்சி பேசி
முரசு கொட்டும்
முட்டாள் நடிகர்
அவர் மூலமேனும்
பொதுவுடைமை
மலருமா
என ஏங்கித்தவிக்கும்
இலக்கிலா இடதுகள்….
பிரபலமான கோமாளிகள்
என்ற பேரில்
நாத்தழும்பேறப் பேசும்
வடிவேல்களாம்
அரசியல் ஈசல்கள்
தண்ணீரைவிட ரத்தம்
கெட்டியானது என
ஸ்ரீ ரங்கத்துச்
சொந்தங்களிடம்
தஞ்சமடைந்துவிட்ட
எதிரணித் தலைவி….
வியூகம் வகுத்த பீஷ்மரோ
இப்போது அம்புப் படுக்கையில்
துரோகங்களுக்கு மன்னிப்பு ஏது?
வரலாறு தாட்சண்யமற்ற
தன் தீர்ப்பை
எழுதத் தொடங்குகிறது.
செம்பரிதி
நன்றி : தாகம் இதழ்
Comments
Post a Comment