சமரசம்
எதுவும் சரியில்லாத பொழுது
எல்லாம் சரிதான்
வருவதாக சொன்னவன்
போகிறான்
போவதாகச் சொன்னவன்
வருகிறான்
புன்னகைக்குள்
இருந்து
சீறித்துளாவும்
பாம்பின் நாவுகள்
வெயிலோடு மழை...
காலம் மாறிவிட்டதாக
சொல்கிறார்கள்
வெயிலும் மழையும்
தொட்டுக் கொள்ளக்கூடாதா
என்ன?
வெயில் குளிர்கிறது
மழை தகிக்கிறது
எதுவும் சரியில்லாத போது
எல்லாம் சரிதான்.
சிலந்தியிடம் சிக்கிய
பூச்சியின் நியாயத்தை
கேட்பவர் யார்?
இப்போது
படபடக்கும் பூச்சியைக் கண்டு
பயம் கொள்கிறது
சிலந்தி
எதுவும் சரியில்லாத போது
எல்லாம் சரிதான்
சமரசங்களின் தாலாட்டில்
சமர்த்தாய்த் துயில் கொள்கிறது
சுயம்.
மேனா.உலகநாதன்
Comments
Post a Comment