Skip to main content

எதற்கு இந்த இரட்டை வேடம்?

“இந்த அரசுக்கு பதின் ஆண்டுகளின் (Decades) தொடக்கம் எது என்பதே இன்னும் தெரியவில்லை. கடந்த 2010ம் ஆண்டு பட்ஜெட் கூட்டத் தொடரைத் தொடங்கி வைத்து உரையாற்றிய குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல், இதே போன்று பதின் ஆண்டுகள் தொடங்குவதாக கூறினார். இந்த ஆண்டும் உரையின் தொடக்கத்தில் அதையே கூறுகிறார். இதில் இருந்தே இந்த அரசின் உணர்ச்சியற்ற தன்மையைப் புரிந்து கொள்ள முடிகிறது”

மக்களவையில், குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீலின் உரைக்கு நன்றி தெரிவித்துப் பேசிய மார்க்சிஸ்ட் கட்சி பொதுச்செயலாளர் பிரகாஷ்காரட், 
இப்படித்தான் தமது உரையைத் தொடங்கினார்.

அவரது இந்த விமர்சனத்தை வெறும் அரசியல் நையாண்டியாகப் புறந்தள்ளி விட முடியவில்லை.

ஒரு குடியரசுத் தலைவரின் உரையில் கடந்த ஆண்டு இடம்பெற்ற அதே உறுதி மொழிகளும், கருத்துருக்களும் இந்த ஆண்டும் இடம்பெறுவது, ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை உள்ள எவரையும் ஆத்திரப்பட வைப்பதில் வியப்பில்லை.
விலைவாசி உயர்வையும், பணவீக்கத்தையும் கட்டுப்படுத்துவதில் இதே மெத்தனப்போக்கை இந்த அரசு காட்டிவருவதாகவும்  பிரகாஷ் காரட் அப்போது குற்றம்சாட்டினார்.

மத்திய அரசின் மீதான அவரது இந்தக் குற்றச்சாட்டை உறுதிப்படுத்துவது போல இருந்தது, வறுமைக் கோட்டுக்குக் கீழே உள்ளவர்கள் குறித்து, மத்திய நாடாளுமன்ற விவகார மற்றும் திட்டமிடல் துறை அமைச்சர் அஷ்வினி குமார், மக்களவையில் அதே நாளில் சமர்ப்பித்த அறிக்கை.

கடந்த 2002ம் ஆண்டில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின் படி நாட்டில் 5.5 கோடிப் பேர் வறுமைக் கோட்டுக்குக் கீழே உள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளதாக அந்த அறிக்கை தெரிவித்தது.

ஆனால், இந்த கணக்கெடுப்பில் சில மாநிலங்களில் முழுமையான தகவல்களை பெற முடியவில்லை என்ற உண்மையையும் அந்த அறிக்கை ஏற்றுக் கொண்டுள்ளது.

அந்த மதிப்பீட்டின் படி, பீகாரில் அதிகபட்சமாக 1.13 கோடி பேரும், உத்தரபிரதேசத்தில் 1 கோடி பேரும், மகாராஷ்டிர மாநிலத்தில் 45 லட்சம் பேரும், மத்திய பிரதேசத்தில் 40 லட்சம் பேரும், மேற்குவங்கத்தில் 39 லட்சம் பேரும் வறுமைக்கோட்டுக்கு கீழே உள்ளவர்கள் என மதிப்பிடப் பட்டிருப்பதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அதுமட்டுமல்ல. கடந்த 1997ம் ஆண்டு வறுமைக்கோடு குறித்து எடுக்கப்பட்ட கணக்கெடுப்பும், 2002ம் ஆண்டு எடுக்கப்பட்ட கணக்கெடுப்பும், வெவ்வேறு முறைகளில் எடுக்கப்பட்டிருப்பதால், இரண்டையும் ஒப்பிட இயலவில்லை என்றும் அந்த அறிக்கையில் மத்திய அரசு தனது குழப்பத்தை வெளிப்படுத்தி உள்ளது.

வறுமைக் கோட்டுக்கான வருவாய் இலக்கை அதிகரிக்க வேண்டும் என பல மாநிலங்கள் கோரியிருப்பதையும் அந்த அறிக்கையை சமர்ப்பித்த அமைச்சர் அஷ்வினி குமார் அப்போது குறிப்பிட்டார். மாநிலங்களின் இந்த கோரிக்கையை நிறைவேற்றுமாறு, மத்திய அரசுக்கு சுரேஷ் டெண்டுல்கர் தலைமையிலான நிபுணர் குழு வலியுறுத்தி இருப்பதாகவும் அவர் கூறினார்.  அந்தக் குழுவின் பரிந்துரையை மத்தியத் திட்டக்குழு ஏற்றுக் கொண்டுள்ளதாகவும் அஷ்வின்குமார் கூறியுள்ளார்.

மேலும், நகர்ப்புறத்தில் வறுமைக்கோடு குறித்த கணக்கெடுப்பை நடத்துவதற்கான தெளிவான வரையறை இதுவரை கண்டறியப்படவில்லை என்ற உண்மையையும் அப்போது ஒப்புக்கொண்ட அஷ்வினி குமார், சரியான கணக்கெடுப்பு முறை குறித்து ஆய்வு செய்ய மத்திய திட்டக் குழு எஸ்.ஆர்.ஹசீம் தலைமையில் ஒரு குழுவை அமைத்துள்ளதாகவும் கூறினார்.

ஆக, வறுமைக் கோட்டுக்குக் கீழே உள்ளவர்கள் குறித்த உண்மையான புள்ளி விபரத்தையே இதுவரை மத்திய அரசால் தெரிந்து கொள்ள முடியவில்லை.
வறுமை ஒழிப்பே தமது முதலும் முடிவுமான இலக்கு என்று அடிக்கடி சொல்லிக்கொள்ளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு, அதனைக் கண்டறிவதில் எந்த அளவு குழம்பிக் கிடக்கிறது என்பதை, மத்திய அமைச்சர் அஷ்வினி குமாரின் இந்த அறிக்கை நமக்கு தெளிவு படுத்துகிறது.

இதே போன்று, குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவித்து பேசிய மார்க்சிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் சீதாராம் யெச்சூரி தெரிவித்துள்ள கருத்துகள், வறுமை ஒழிப்பு உள்ளிட்ட அடித்தட்டு மக்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதில், மத்திய அரசு காட்டி வரும் அக்கறை எவ்வளவு போலித்தனமானது என்பதை தோலுரித்துக் காட்டுகிறது.

கடந்த ஓராண்டில் மட்டும் பெருமுதலாளிகள் மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு 2 லட்சத்து 25 ஆயிரம் கோடி ரூபாயை, மத்திய அரசு வரிச்சலுகையாக அள்ளி வழங்கி இருப்பதாக அவர் குற்றம்சாட்டி உள்ளார்.

இந்தப் பணத்தை ஏழை, பணக்காரர்களுக்கு இடையே அதிகரித்துவரும் இடைவெளியை நிரப்புவதற்கு மத்திய அரசு பயன்படுத்த வேண்டும் எனவும் யெச்சூரி வலியுறுத்தி உள்ளார்.

இந்தியாவில் ஐபிஎல் (ஐபிஎல் கிரிக்கெட் அணிகளை ஏலத்தில் எடுக்கும் கோடீஸ்வரர்கள்) பிபிஎல் (வறுமைக் கோட்டுக்கும் கீழே உள்ள ஏழைகள்) என மக்கள் இரண்டு பிரிவினராக கூறுபோடப்பட்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

விலைவாசி உயர்வு மற்றும் உணவுப்பொருள் உற்பத்தி விவகாரத்தில், மத்திய அரசு, அண்மையில் மேற்கொண்டு வரும் சில நடவடிக்கைகளை உன்னிப்பாக கவனித்தால், மார்க்சிஸ்ட் கட்சித் தலைவர்கள் முன்வைக்கும் இந்த விமர்சனத்தில் பொதிந்துள்ள உண்மை புரியவரும்.

வெங்காயத்தின் உற்பத்தி சரிந்து, அதன் விலை விண்ணை முட்டுமளவு உயர்ந்து, மக்களை மூச்சுத்திணற அடித்துக் கொண்டிருந்தபோது, மற்றொரு பக்கம் உருளைக் கிழங்குகளை குறைந்த விலைக்கு கொள்முதல் செய்து பாதுகாத்து வைக்க, நொறுக்குத் தீனி (Junk Foods)  தயாரிக்கும் பன்னாட்டு நிறுவனங்களுக்கு அனைத்து உதவிகளையும் செய்தது மத்திய அரசு.

ஆனால், விவசாயிகள் தங்களின் உற்பத்தி பொருட்களை பாதுகாத்து, பதனிட்டு வைப்பதற்கான தொழில் நுட்ப வசதிகளை செய்து கொடுக்க மத்திய அரசுக்கு இதுவரை மனம் வரவில்லை.

சில்லரை வர்த்தகத்தில் கார்ப்பரேட் நிறுவனங்களை அனுமதித்து, அந்த நிறுவனங்களுக்கு உணவுப் பொருள்களை அடிமாட்டு விலைக்கு வாங்கி சேமிப்பதற்கான வசதிகளையும்  மத்திய அரசு செய்துதரத் தொடங்கி உள்ளது.

அதுமட்டுமின்றி, கிராமப்புறங்களில், விவசாயிகளிடம் இருந்து உணவுப் பொருள்களை வாங்குவதற்கான கொள்முதல் நிலையங்கள் அமைக்கவும் பன்னாட்டு உள்நாட்டு பெருநிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதுவரை இந்தப் பணியை செய்துவந்த அரசு கூட்டுறவுப் பண்டகசாலைகள், படிப்படியாக செயலிழக்கச் செய்யப்பட்டு, பின் அவற்றின் மூச்சு முழுமையாக நிறுத்தப்படும்.

இதன் மூலம், உணவுப் பொருள் உற்பத்தி, கொள்முதல், சேமிப்பு, விநியோகம் உள்ளிட்ட மக்கள் நலன் சார்ந்த கடமைகளில் இருந்து மெல்ல மெல்ல தன்னை விடுவித்துக் கொள்ளும் மத்திய அரசு, பெருமுதலாளிகளின் லாபத்தைப் பெருக்கும் சேவையில் மனமுவந்து ஈடுபட்டு வருகிறது.
                                                    
இப்படி, ஒருபக்கம் மக்களுக்கு எதிரான அனைத்து நடவடிக்கைகளையும் அமல்படுத்திக் கொண்டு, மற்றொருபக்கம் வறுமை ஒழிப்பு, உணவுப்பாதுகாப்பு என்று சொல்லும் மத்திய அரசின் இரட்டை அணுகுமுறை, அபத்தமானது மட்டுமல்ல, ஆபத்தானதும் கூட.

பிரகாஷ் காரட் சொல்வதைப் போல, இந்த அரசை உணர்ச்சியற்ற அரசு என்பதா? அல்லது உண்மையற்ற அரசு என்பதா?

மேனா. உலகநாதன்.
நன்றி : தினமலர் - செய்திமலர்  (நெல்லை)

Comments

Popular posts from this blog

அரசியல் பேசுவோம் -14 – அண்ணா நிகழ்த்திய அரசியல் வேதிவினை! : செம்பரிதி

1962ம் ஆண்டு மார்ச் 15ம் தேதி காமராஜர், மீண்டும் தமிழகத்தின் முதலமைச்சரானார். பக்தவச்சலம், கக்கன் உள்ளிட்டோர் அவரது அமைச்சரவையில் இடம்பெற்றனர். திருச்செங்கோடு இடைத்தேர்தலில் திமுக பெற்ற வெற்றி மாநில காங்கிரசாரை மட்டுமின்றி, மத்தியில் உள்ளவர்களையும் மலைக்க வைத்தது. விளைவு பிரிவினை கட்சிகளை சட்டவிரோத இயக்கமாக அறிவிக்கும் மசோதாவை காங்கிரஸ் அரசு நிறைவேற்றியது. நாடாளுமன்றத்தில் அதனை அண்ணா எதிர்த்துப் பேசினாலும், மசோதா நிறைவேற்றத்தைத் தடுக்க முடியவில்லை. அடுத்த கட்டமாக பிரிவினைத் தடைச்சட்டத்தை எதிர்கொள்வதற்கான வியூகத்தை வகுகக் வேண்டிய நெருக்கடி அண்ணாவுக்கு ஏற்பட்டது. கட்சியினரைத் தனித்தனியாகவும் ,அமைப்பு ரீதியாகவும், குழுக்களாகவும் அழைத்து பிரிவினைத் தடைச்சட்டம் குறித்து ஆலோசனை நடத்தினார் அண்ணா. கட்சியின் அடிப்படை விதிகளில் ஒன்றாக இருந்த திராவிடநாடு கோரும் பிரிவைத் திருத்த வேண்டிய நிலை ஏற்பட்டிருப்பதை அவர்களுக்கு எடுத்துரைத்தார். முடிவாக 1963ம் ஆண்டு நவம்பர் மாதம் கட்சியின் செயற்குழுவைக் கூட்டினார். அதில் திராவிட நாட்டை வலியுறுத்தும் கட்சியின் 2வது விதி திருத்தப்பட்டது. “தமிழகம...

(சில இயக்கங்கள் தொடங்கப்படும் போது நமக்குள் எழும் கேள்விகள் எத்தனை அர்த்தம் உள்ளவையாக உள்ளன?இயக்குநர் சீமான் "நாம் தமிழர்" இயக்கத்தைத் தொடங்கும் தருணத்தில் (மே-18, 2010) ஈஅரங்கம் என்ற இணைய இதழில் வெளியான இந்தக் கட்டுரை, அத்தகைய கேள்விகளை மேலும் அர்த்தம் பொதிந்ததாக ஆக்குகிறது.)

நாம் தமிழர் இயக்கம் :     மாறும் போர் வடிவம்? (மே 18, 2010ல் வெளியானது) வரும் 18ம் தேதி தமிழகத்தில் மேலும் ஒரு புதிய அரசியல் கட்சி உதயமாகிறது. நாம் தமிழர் இயக்கத்தை அரசியல் கட்சியாக அறிவிப்பதன் மூலம், திரைப்பட இயக்குநராக இருந்த சீமான், தலைவராக பரிணாமம் அடைகிறார். எனினும், நடிகர் விஜயகாந்தின் தேமுதிகவைப் போல, உள்ளீடற்ற அரசியல் பதராக ‘நாம் தமிழர்’ இயக்கத்தை பார்க்க முடியாது. கடந்த ஆண்டு, தமிழீழத்திற்கான ஆயுதப்போராட்டம் முடிவுக்கு வந்த அதே மே மாதம் 18ம் தேதியன்று, இந்த நிகழ்வை ஏற்பாடு செய்திருப்பதன் மூலம், தமிழர்களின் அரசியல் போராட்டத்திற்கான பிரகடனமாகவே இதனைப் புரிந்து கொள்ள வேண்டி இருக்கிறது. 20 – 21ம் நூற்றாண்டுகளில், தமிழீழத்திற்காக  நடத்தப்பட்ட ஆயுதப்போராட்டத்தை, மூன்றாம் உலகத்தின், மிகப்பெரிய தேசிய இனப்போராட்டங்களில் ஒன்றாகவே வரலாறு பதிவு செய்யும் என்பதில் அய்யமில்லை. அத்தகைய ஆயுதப்போராட்டத்தின் முடிவுக்குப் பின்னர், அதன் தொப்புள் கொடி மண்ணான தமிழகத்தில் உதயமாவதாலேயே,  நாம் தமிழர் இயக்கம், மிக முக்கியமான கவனத்தை பெறுகிறது. எனினும்...

திராவிட இயக்க முன்னோடி டாக்டர் சி.நடேசன் : க.சோமாஸ்கந்தன்

  சிந்தனையாளன், 7, பிப்ரவரி 2017 அன்பும் அருளும் தயையும் நிறைந்த பெருந்தகை, பகையும் வஞ்சமும் இன்றி ஒளிர்ந்த ஒப்பற்ற மனிதர், பணம், பட்டம், பதவி, ஆட்சி அதிகாரம் என எதைப் பற்றியும் சிந்தியாது பொது நலமே தன் நலம் என்று வாழ்ந்த மாமனிதர், பிராமணரல்லாத மக்களின் வாழ் வியல் உரிமைகளுக்காகத் தம் வாழ்நாள் முழுவதும் உழைத்த உத்த மர் டாக்டர் சி. நடேசன் அவர்கள், திராவிட இயக்கத்தின் முன்னோடித் தலைவர்களில் முதல்வராகத் திகழ்ந்த வர். திருவல்லிக்கேணி பெரிய தெரு எனப்படும் வீரராகவ முதலியார் தெரு வில் வாழ்ந்த கிருஷ்ணசாமி முதலியாரின் புதல்வ ராக, 1875இல் நானிலம் போற்றும் நடேசன் பிறந்தார். திருவல்லிக்கேணியில் தொடக்கப் பள்ளியில் பயின்ற அவர் சென்னைப் பல்கலைக்கழகத் தில் இளங்கலை (BA) பட்டம் பெற்றார். பின்னர், ஆர். வெங்கடரத்தினம் நாயுடு தலைமையில் நடந்துவந்த பித்தாபுரம் மகாராஜ கல்லூரியில் உடலியல் (Physiology) விரிவுரையா ளராகச் சிறிது காலம் பணியாற்றினார். மருத்துவச் சேவை ஏழை எளியோர்க்குத் தொண்டு புரிய வேண்டும் என்ற எண்ணம் அவரிடம்  மேலோங்கி நின்றது. சேவை புரிதற்குரிய துறை மருத்துவத் துறை என உணர்ந் தார். சென்னை ம...