Skip to main content
(23.1.11 தினமலர் செய்திமலரில் பிரசுரமான கட்டுரை)
 நிலை குலைக்கும் விலை உயர்வு…

ந்த மாதத்தில்மட்டும் இரண்டாவது முறையாக பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. விலை உயர்த்திக்கொள்ளும் அதிகாரம் எண்ணெய் நிறுவனங்களிடமே ஒப்படைக்கப்பட்ட பின்னர் இது எட்டாவது முறை.

ஏற்கனவே வெங்காயம், தக்காளி, உருளைக்கிழங்கு உள்ளிட்ட பொருட்களின் விலை தாறுமாறாக எகிறி, விண்ணைத் தொட்டுத்தொட்டு விளையாடிக் கொண்டிருக்கிறது.

பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்குப் பின்னர் இனி கேட்க வேண்டாம். ஏறுமுகம்தான்.  

விலை உயர்வு என்பது ஏதோ ஒரு விதத்தில் கட்டுப்படுத்த முடியாத முரட்டுக் காளையாய், அரசுகளுடன் ஜல்லிக்கட்டு நடத்துகிறது. அது அரசே முன்னின்று நடத்தும் ஜல்லிக்கட்டாகவும் இருக்கிறது.

‘இப்படியே போனால் எங்கள் கதி என்னாவது’ என்ற சாமானியனின் கேள்விக்கு எந்த அரசியல் கட்சிகளிடமும் பதில் இல்லை.

சாமான்ய மக்களை மத்திய அரசு பழிவாங்குகிறது என்று குற்றம் சாட்டும் பாரதிய ஜனதாவிடம் கூட, இதற்கான விளக்கம் இல்லை. விலை உயர்வுக்கு எதிராக ஒன்றிணைந்து போராடுவது குறித்து, இடதுசாரிகள் மற்றும் மதச்சார்பற்ற கட்சிகளுடன் ஆலோசனை நடத்தப் போவதாக கூறும் மார்க்சிஸ்ட் கட்சியிடமாவது,  விலை உயர்வைக் கட்டுப்படுத்தும் மந்திரம் இருக்கிறதா என்றும் தெரியவில்லை.

வெங்காயம், தக்காளி போன்ற அத்தியாவசியக் காய்கறிகளின் விலை மற்றும் உற்பத்தி நிலவரம் குறித்த மத்திய வேளாண்துறையின் புள்ளி விவரம், இந்தப் பிரச்சனை குறித்து சில முக்கியமான கேள்விகளை நம்முள் எழுப்புகிறது. 

கடந்த 2006ம் ஆண்டு முதல், நடப்புப் பருவம் வரை, வெங்காயம், தக்காளி இவற்றின் ஒட்டுமொத்த உற்பத்தியைப் பொறுத்தவரை ஏறுமுகத்தில்தான் இருந்து வருகிறது. குறையவே இல்லை என்பதை அரசின் புள்ளிவிவரமே நமக்கு சொல்லுகிறது.

அதாவது, கடந்த 2006ம் ஆண்டில்  தக்காளி பயிரிடப்படும் ஒட்டு மொத்த நிலப்பரப்பின் அளவு 17 லட்சத்து 40 ஆயிரம் ஹெக்டேராக இருந்தது. இது  , தற்போது 18 லட்சத்து 90 ஆயிரம் ஹெக்டேராக அதிகரித்துள்ளது. இதன் காரணமாக, 280 லட்சம் டன்னாக இருந்த தக்காளியின் ஒட்டுமொத்த உற்பத்தி, தற்போது 400 லட்சம் டன்னாக அதிகரித்துள்ளது. 

அதே நேரத்தில் 2006ம் ஆண்டில் குவிண்டால் 500 ரூபாயாக இருந்த தக்காளியின் விலை, 2010ம் ஆண்டில் 843 ரூபாயாக உயர்ந்துள்ளது. வெங்காயத்தின் கதையும் இதுதான்.

உற்பத்தி அதிகமானால் விலை குறைய வேண்டும் என்பதுதானே, இயல்பான நடைமுறை. ஆனால் இங்கே நேரெதிராக நடந்து வருகிறது. இதற்கு என்ன காரணம்?

வரி விதிப்பில் குழப்பம் என்று சிலர் சொல்லுகிறார்கள். ஏற்றுமதி, இறக்குமதிக் கொள்கையில் உள்ள குளறுபடிகளே காரணம் என்று மற்றொரு தரப்பினர் சொல்லுகிறார்கள். மொத்தத்தில் ஏதோஒரு கொள்கைக் குழப்பத்தின் விளைவே இந்த விலை உயர்வு என்பது மட்டும் நமக்குப் புரிகிறது.

இது ஒருபுறம் இருக்க, அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வுக்கு நாம் எதிர்பாராத சில காரணங்களும் சொல்லப்படுவதுதான் அதிர்ச்சியாக இருக்கிறது.

அவற்றில் முதலாவதாக, நாட்டின் ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 60 சதவீதமாக இருக்கும் இளைய தலைமுறையினரின் வாங்கும் சக்தி அதிகரித்து வருவதை ஒரு காரணமாக வல்லுநர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள். பத்து ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட இளைஞர்களின் வருவாய் விகிதம் அதிகரித்திருப்பதால், அவர்கள் என்ன விலை கொடுத்தும் பொருட்களை வாங்கத் தயாராக உள்ளதாக அவர்கள் கூறுகின்றனர். 

ஆனால், இதை சமூகத்தின் அனைத்து மட்ட இளைஞர்களுக்குமான அளவு கோலாக எடுத்துக் கொள்ள முடியாது. கம்ப்யூட்டர் தொழில் நுட்பம் மற்றும் பொறியியல் கல்வி கற்று, லட்சங்களில் சம்பளம் வாங்கும் இளைஞர்களின் எண்ணிக்கை 5 சதவீதத்திற்கும் மேல் தேறாது. 

எனினும், ஒட்டு மொத்த சமூக மாற்றத்தின் காரணமாக அடிப்படை வருவாய் விகிதம் ஓரளவுக்கு உயர்ந்திருப்பதை மறுப்பதற்கில்லை. விலை உயர்வுக்கு இது ஒரு காரணமாக கூறப்படுவதை ஏற்க முடியவில்லை என்றாலும், முழுமையாக மறுக்கவும் முடியவில்லை.

மற்றொரு காரணம் இன்னும் வினோதமானது.

ஆண்டுக்கு 100 நாள் வேலைத்திட்டத்தின் காரணமாக விவசாயத் தொழிலாளர்களின் ஒரு நாள் கூலி, சராசரி 150 ரூபாயக உயர்ந்து விட்டதாகவும், இதனால் உற்பத்திச் செலவு அதிகரித்திருப்பதாகவும், விவசாயிகளில் ஒரு தரப்பினர் கூறுகின்றனர். 

2006ம் ஆண்டிற்குப் பின்னர் ஏற்பட்டுவரும் விலை ஏற்றத்திற்கும், இதற்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதாக, பொருளாதார வல்லுநர்களே கூறுகிறார்கள். விவசாயிகளின் உற்பத்திச் செலவு அதிகரிக்கும் போது, கொள்முதல் விலையும், அதன்காரணமாக சில்லறை விலையும் அதிகரிப்பதாக அவர்கள் கருதுகிறார்கள். 

ஆனால், விவசாயிகளின் உற்பத்திக்கு உரிய விலை கிடைப்பதில்லை என்பது, இன்று வரை முக்கியமான குற்றச்சாட்டாக இருந்து வருவதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். அப்புறம் எப்படி விலை உயர்வுக்கு விவசாயிகள் காரணம் ஆவார்கள். அப்படி இருந்தால் இந்த விலை உயர்வை ஏற்றுக்கொள்வதே நியாயமும்  கூட! 

ஆனால், நாட்டில் எந்த விவசாயியும் அப்படி நிறைவடைந்திருப்பதாக தெரியவில்லை.

அடிப்படை வறுமையை ஒழிப்பதற்காக நடைமுறைப்படுத்தப்படும் ஆண்டுக்கு 100 நாள் திட்டத்தை விலை உயர்வுக்கு காரணமாக கூறுவதையும் ஏற்றுக் கொள்ளமுடியாது. விவசாயத் தொழிலாளர்களின் கூலி விகிதம் உயர்வதை எதிர்மறையாக பார்க்கும் போக்கு விபரீதமானதும் கூட.

ஆக, வாங்கும் சக்தி உயர்ந்துள்ளதே விலை உயர்வுக்கு காரணம் என்று  காட்டி, கணக்கை நேர்செய்யும் முயற்சியாகவே இந்த விளக்கத்தை நாம் புரிந்து கொள்ள வேண்டி  இருக்கிறது.

உற்பத்தி அதிகரித்தால், விலை கட்டுப்பாட்டுக்குள் இருக்க வேண்டும் என்பதுதான் அடிப்படையான பொருளாதாரக் கோட்பாடு. தற்போதைய நிலை அதற்கு முரணாக காணப்படுவது ஏன் என்பதுதான் இன்று நம்முன் எழுந்து நிற்கும் முக்கியமான கேள்வி.

கற்பனைக்கு எட்டாத பொருளாதார ஏற்றத்தாழ்வு நிலவும் ஒரு சமூகத்தில், பொத்தாம் பொதுவான நியாயங்களைத் தீர்வாக வைக்க முடியாது. மாதம் ஒரு லட்சம் சம்பரூபாய் சம்பளம் வாங்குகிறவன் கொடுக்கும் விலையைத் தான், 5 ஆயிரம் ரூபாய் சம்பளம் வாங்குகிறவனும், அதற்கும் கீழாக இருப்பவனும் கொடுக்க வேண்டி இருக்கிறது. 

அதற்காக ஒரு கிலோ தக்காளியின் விலை 10 பைசாவாக குறையவும் வேண்டாம். பின்னர் 60 ரூபாயாக அதிகரிக்கவும் வேண்டாம்.

மாதத்திற்கு இரண்டு முறை பெட்ரோல், டீசலின் விலை உயர்ந்தால், அத்தியாவசியப் பொருட்களின் விலை நான்கு முறை உயர்த்தப்படும் என்பதுதானே உண்மை.

அடிப்படையான தவறுகளை விட்டுவிட்டு, அங்கொன்றும், இங்கொன்றுமாக காரணங்களைத் தேடி அலைவதில் பயனில்லை என்பதை ஆட்சியாளர்கள் உணரவேண்டும்.

விலையின் ஏற்ற இறக்கம், சராசரியானதாக இருக்க வேண்டும் என்பதே சரியான நிலைப்பாடாக இருக்கும். காரணம் எதுவாக இருந்தாலும், முடிவில் உறுதியும், கோட்பாட்டில் தெளிவும் இருந்தால்,  அத்தியாவசியப் பொருட்களின் விலையில் ஏற்படும், இத்தகைய அதல பாதாள ஏற்றத்தாழ்வை நிச்சயமாக தடுத்து நிறுத்த முடியும். 

விலை உயர்வுக்கு சரத்பவாரும், கூட்டணி ஆட்சியுமே காரணம் என்று சாக்குப் போக்கு சொல்வதை விட்டு விட்டு, மத்திய அரசு முழு மனதுடன் அதற்கான நடவடிக்கையைத் தொடங்க வேண்டும்.
மேனா.உலகநாதன்.

Comments

Popular posts from this blog

நெருடல் ----------------------------------------------------------------------- அவரைப் பார்த்தும் பாராதவனாய்த் திரும்பிக் கொண்டேன் பார்க்காமல் போகிறார் என்பதைப் பார்க்காமல் பார்த்திருக்கலாம்தான் கேள்வியும் பதிலும் உள் நெருடியது பார்த்தும் பாராமையை பார்த்தும் பாராமல் சென்ற அவரின் பக்குவம் பார்த்தும் பாராத நான்.   மேனா. உலகநாதன்

அரசியல் பேசுவோம் -14 – அண்ணா நிகழ்த்திய அரசியல் வேதிவினை! : செம்பரிதி

1962ம் ஆண்டு மார்ச் 15ம் தேதி காமராஜர், மீண்டும் தமிழகத்தின் முதலமைச்சரானார். பக்தவச்சலம், கக்கன் உள்ளிட்டோர் அவரது அமைச்சரவையில் இடம்பெற்றனர். திருச்செங்கோடு இடைத்தேர்தலில் திமுக பெற்ற வெற்றி மாநில காங்கிரசாரை மட்டுமின்றி, மத்தியில் உள்ளவர்களையும் மலைக்க வைத்தது. விளைவு பிரிவினை கட்சிகளை சட்டவிரோத இயக்கமாக அறிவிக்கும் மசோதாவை காங்கிரஸ் அரசு நிறைவேற்றியது. நாடாளுமன்றத்தில் அதனை அண்ணா எதிர்த்துப் பேசினாலும், மசோதா நிறைவேற்றத்தைத் தடுக்க முடியவில்லை. அடுத்த கட்டமாக பிரிவினைத் தடைச்சட்டத்தை எதிர்கொள்வதற்கான வியூகத்தை வகுகக் வேண்டிய நெருக்கடி அண்ணாவுக்கு ஏற்பட்டது. கட்சியினரைத் தனித்தனியாகவும் ,அமைப்பு ரீதியாகவும், குழுக்களாகவும் அழைத்து பிரிவினைத் தடைச்சட்டம் குறித்து ஆலோசனை நடத்தினார் அண்ணா. கட்சியின் அடிப்படை விதிகளில் ஒன்றாக இருந்த திராவிடநாடு கோரும் பிரிவைத் திருத்த வேண்டிய நிலை ஏற்பட்டிருப்பதை அவர்களுக்கு எடுத்துரைத்தார். முடிவாக 1963ம் ஆண்டு நவம்பர் மாதம் கட்சியின் செயற்குழுவைக் கூட்டினார். அதில் திராவிட நாட்டை வலியுறுத்தும் கட்சியின் 2வது விதி திருத்தப்பட்டது. “தமிழகம...
நன்றாகவே…. சில மௌனங்கள் பல புறக்கணிப்புகள் பாடம் நடத்தியபடியே நகர்கிறது காலம். இலையுதிர்கால மரத்தில் இருந்து உதிரும் உயிர்த்துளி வெள்ளமெனப் பெருகிப் பரவ துளிர்க்கும் பசித்த மானுடம் வசந்தம் சூல்கொள்ளும் பூக்களின் தேன் துளி விஷமெனக் கரைந்து கொல்லும் விதி எனும் கற்பிதத்தை வீழும்போதே எழும் எமது வீறுதனில் மோதிச்சிதறும் அவர்தம் உன்மத்தம் எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது. மேனா.உலகநாதன்