Skip to main content
புதிய பதிவு....


மணல் எனும் மண்ணுயிர்…
ணல்….
மனித இனத்தின் தொன்மைகள் அனைத்தையும் உள்வாங்கியபடி, பரந்தும், விரிந்தும், ஒடுங்கியும், வளைந்தும் நதியின் போக்கில் படிந்து கிடக்கும் காலத்தின் சுவடு.

நதிகளின் வழியாகத்தான், மனித இனம் தன் நாகரிகத்தையும், பரிணாம வளர்ச்சியையும் தகவமைத்துள்ளது.

ஆற்றங்கரையில் அமர்ந்து நண்பர்களுடன் அளவளாவிய அனுபவம் உள்ளவர்களால் மட்டுமே, மணலுக்கும், மனிதர்களுக்கும் உள்ள நுட்பமான உறவையும், அது கிளர்த்தும் உணர்வையும் புரிந்து கொள்ள முடியும்.

மனிதர்களுக்கும், நதிக்கும் இடையே உயிர்ப்பிணைப்பாக பின்னிக்கிடக்கும் மணல், தற்போது கட்டுமானப் பொருட்களில் ஒன்றாக மட்டுமே மதிக்கப்படுவதுதான் சோகம்.

இல்லாவிட்டால், மணல் கொள்ளை என்பது, போதைப் பொருள் கடத்தல், குழந்தைகள் கடத்தல், கூலிக்காக ஆட்களைக் கொல்லுதல் போன்றவற்றை எல்லாம் விட, குண்டர்களின் ஆதிக்கம் மிகுந்த கொலைத் தொழிலாக உருவெடுத்திருக்க முடியுமா?

மணல் திருட்டைத் தடுக்கச் சென்ற அதிகாரிகளை மட்டுமே லாரி ஏற்றிக் கொன்றது பழைய நடைமுறை.

இப்போதெல்லாம், எதிரில் யார் வந்தாலும், மோதிக் கொன்று நசுக்கி விட்டு மணல்லாரிகள் மாயமாகி விடுவது வழக்கமாகி விட்டது.

கடந்த வாரத்தில் மட்டும் இது போன்ற பல சம்பவங்கள் நடந்துள்ளன.
சேலம் அருகே எதிரே இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்த பெண்மணியை, மணல் லாரி ஒன்று மூர்க்கத்துடன் மோதிக் கொன்றது.

இதற்கு எதிராகத் திரண்ட பொதுமக்களுடன், அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் தம்பிதுரையும் சேர்ந்து போராட்டம் நடத்தினார்.

திருவள்ளூர் அருகே இதே போல் மணல் லாரி மோதிய சம்பவத்தில், இரு சக்கர வாகனம் அப்பளமாக நொறுங்கியது. அதில் வந்தவர் நல்ல வேளையாக காயங்களுடன் தப்பினார். இதற்கு எதிராகவும் மக்கள் திரண்டு போராட்டம் நடத்தினர்.

ஆனாலும் என்ன?

அதிகாரத்தில் உள்ளவர்களின் ஆதரவோடு நடந்தேறும் இத்தகைய அட்டூழியங்களை, அப்பாவி மக்களின் போராட்டம் என்ன செய்து விடப்போகிறது?

சாலைகளில் சீறி வரும் மணல் லாரிகளின் மூர்க்கமும், கொலை வெறியும் அப்பாவி மக்களைக் குலை நடுங்கச் செய்வதில் ஆச்சர்யமில்லை.

பெண்களுக்கு நிகராக சங்ககாலப் புலவர்களாலும், தற்காலக் கவிஞர்களாலும் வர்ணிக்கப்படும் நதிகளின் மணல்மேனி, பொக்லைன் இயந்திரங்களால் புண்ணாக்கப்படும் கொடூரம், எந்தவகையிலும் சகித்துக் கொள்ள முடியாதது.
தமிழகம் மட்டுமே சொந்தம் கொண்டாட முடிந்த ஒரே நதியான, தாமிரபரணியும் 

மணல் கொள்ளையால் மரணத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது.
இதற்கு எதிராக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த்தலைர் நல்லகண்ணு தலைமையில் நடந்து வரும் சட்டரீதியான போராட்டம், மிகவும் முக்கியமானது.

அவரது இந்தப் போராட்டத்தின் விளைவாக, தோழப்பன்பண்ணை, மங்களக்குறிச்சி, கீழ்ப்படுகை, அப்பன் திருப்பதி மற்றும் திருமலைக்கொழுந்து ஆகிய இடங்களில் மணல் அள்ள உயர்நீதி மன்றத்தின் மதுரைக் கிளை, இடைக்காலத் தடை விதித்து உள்ளது. இந்த வழக்கில் நல்லகண்ணு, நீதி மன்றத்தில் நேரில் ஆஜராகித் தமது வாதங்களை எடுத்துரைத்தது குறிப்பிடத்தக்கது.

பாலாற்றின் குறுக்கே ஆந்திர அரசு அணைகட்டுவதைத் தடுத்து நிறுத்த வலியுறுத்தி, கடந்த வாரம் நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்துகொண்ட பழ.நெடுமாறன், மணல் கொள்ளைக்கு எதிராக விவசாயிகள் ஒன்று திரண்டு போராட வேண்டும் என விடுத்துள்ள அழைப்பு கவனத்திற்கு உரியது.

மணல் கொள்ளையைத் தடுக்காவிட்டால், அது நமது அடுத்த தலைமுறையைப் பாதிக்கும் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.

உண்மைதானே.

நமது மூதாதையர்கள் நமக்கு வளமான நதிகளையும், வனப்பான நிலங்களையும் விட்டுச் சென்றனர்.

அவற்றை அடுத்த தலைமுறையினருக்கு நாம் விட்டுச் செல்கிறோமா? இல்லையே! வெறும் காங்கிரீட் கட்டிடங்களையும், களையிழந்த நதிளையும் அல்லவா விட்டுச் செல்கிறோம்.

…………..

அந்த மனிதர் குக்கிராமத்தைச் சேர்ந்தவர்.

வெளியூரில் தொழில் செய்து நிறையச் சம்பாதித்து விட்டார். பணம் பெருகும் போது மனம் எப்படிச் சும்மா இருக்கும்?

50 லட்சம் ரூபாய் செலவு செய்து அந்தக் கிராமத்தில் ஒரு பிரம்மாண்ட வீடு கட்டினார். 4 மாடிகள். எண்ணற்ற கண்ணாடி ஜன்னல்கள். விலை உயர்ந்த வேலைப்பாடுகள்.

மும்பை, சென்னை போன்ற நகரங்களில் கட்டி எழுப்பப்படுவதைப் போன்ற கட்டிடமாக அது நிமிர்ந்து நின்றது.

தான் பிறந்த ஊரில் இவ்வளவு பெரிய வீட்டைக் கட்டிவிட்டோம் என்பதில் அவருக்கு ஒரே பெருமிதம்.

வந்தவர்களுக்கெல்லாம் வீட்டைச் சுற்றிக் காண்பித்துக் கொண்டிருந்தார்.
அவர்களில் ஒருவர், ‘இந்தக் கிராமத்தில் இவ்வளவு பெரிய வீடு தேவை இல்லையே. ஏன் இப்படிக் கட்டினீர்கள்? நகர்ப்புற மனிதர்கள்தான் எதைப் பற்றியும் கவலைப் படாமல், இயற்கையின் அத்தனை வளங்களையும் சுரண்டி அடுக்கு மாடிக் குடியிருப்புகளைக் கட்டுகிறார்கள். கிராமப்புறங்களிலாவது அதனைத் தவிர்க்கக் கூடாதா? உங்கள் தேவைக்கு மட்டும் அளவான வீட்டைக் கட்டிக் கொண்டால் போதாதா?’ என்று கேட்டார்.

இதை அந்த 4 மாடி வீட்டைக் கட்டியவர் எதிர்பார்க்கவில்லை. அவரது நெற்றி சுருங்கத் தொடங்கியது.

நியாயமான கேள்விதானே!

ஒரு வீட்டைக் கட்டத் தேவைப்படும் மணல் மட்டுமின்றி, செங்கல், சிமெண்ட், மரம், இரும்பு, ஜல்லி, முண்டுக்கல் என அத்தனையும் இயற்கை வளங்களில் இருந்து பெற வேண்டியவைதான்.

இவற்றில் எதையும் நம்மால் செயற்கையாக உற்பத்தி செய்ய முடியாது. எல்லாமே மண்ணின் வளத்தில் இருந்து வெவ்வேறு வடிவங்களில் பெறக் கூடியவைதான்.

பிரபஞ்சம் என்பது அள்ள அள்ளக் குறையாத அமுத சுரபி அல்ல. எல்லாமே, எடுக்க எடுக்க குறையக் கூடியவைதான்.

இதனால் தான் சில நாடுகளில் மண், சிமெண்ட் இவற்றைவிட மரங்களால் ஆன வீடுகளைக் கட்டத் தொடங்கி உள்ளனர்.

இயற்கையில் நாம் மீண்டும் உற்பத்தி செய்ய முடிந்த ஒரே வளம், மரங்கள் மட்டுமே. அதனால், அவற்றைப் பயன்படுத்தலாம் என்பது அவர்களின் பார்வை.
ஆனால், மரங்களை வெட்டினால் மழை வளம் குறையும் என்பதையும் மறுப்பதற்கில்லை.

எனினும், வீடுகளைக் கட்ட, இயற்கை வளங்களைப் பாதிக்காத ஒரு வழிமுறையைக் கண்டறிய வேண்டியது, காலத்தின் கட்டாயம்.
குறிப்பாக, அது நகரமானாலும், கிராமமானாலும் தேவையற்ற அடுக்குமாடிகளைக் கட்டுவதைத் தடை செய்ய வேண்டும்.

படுக்கவும், இருக்கவும் சொந்தமாக ஓர் இடம் வேண்டும் என்ற ஆசை இயல்பானதுதான்.

அதுவே அனைத்தையும் வளைத்துப் போட வேண்டும் என்ற பேராசையாக உருவெடுக்கும் போதுதான் ஆபத்தாகிறது.

மணல் மண்ணுக்கு உயிரானது. மண் மனிதர்களுக்கு உயிரானது. இரண்டையும் அளவோடு பயன்படுத்தினால் மட்டுமே, அவை அடுத்த தலைமுறையினருக்கும் மிச்சமிருக்கும்.

இல்லாவிட்டால்…. எண்ணிப்பார்க்கவும் முடியாத பயங்கரங்களை எதிர்காலத்தில் அவர்கள் சந்திக்க நேரிடும்.

மேனா.உலகநாதன்

நன்றி : தினமலர் – செய்திமலர் (நெல்லைப் பதிப்பு), 7.11.2010.

Comments

Popular posts from this blog

அரசியல் பேசுவோம் -14 – அண்ணா நிகழ்த்திய அரசியல் வேதிவினை! : செம்பரிதி

1962ம் ஆண்டு மார்ச் 15ம் தேதி காமராஜர், மீண்டும் தமிழகத்தின் முதலமைச்சரானார். பக்தவச்சலம், கக்கன் உள்ளிட்டோர் அவரது அமைச்சரவையில் இடம்பெற்றனர். திருச்செங்கோடு இடைத்தேர்தலில் திமுக பெற்ற வெற்றி மாநில காங்கிரசாரை மட்டுமின்றி, மத்தியில் உள்ளவர்களையும் மலைக்க வைத்தது. விளைவு பிரிவினை கட்சிகளை சட்டவிரோத இயக்கமாக அறிவிக்கும் மசோதாவை காங்கிரஸ் அரசு நிறைவேற்றியது. நாடாளுமன்றத்தில் அதனை அண்ணா எதிர்த்துப் பேசினாலும், மசோதா நிறைவேற்றத்தைத் தடுக்க முடியவில்லை. அடுத்த கட்டமாக பிரிவினைத் தடைச்சட்டத்தை எதிர்கொள்வதற்கான வியூகத்தை வகுகக் வேண்டிய நெருக்கடி அண்ணாவுக்கு ஏற்பட்டது. கட்சியினரைத் தனித்தனியாகவும் ,அமைப்பு ரீதியாகவும், குழுக்களாகவும் அழைத்து பிரிவினைத் தடைச்சட்டம் குறித்து ஆலோசனை நடத்தினார் அண்ணா. கட்சியின் அடிப்படை விதிகளில் ஒன்றாக இருந்த திராவிடநாடு கோரும் பிரிவைத் திருத்த வேண்டிய நிலை ஏற்பட்டிருப்பதை அவர்களுக்கு எடுத்துரைத்தார். முடிவாக 1963ம் ஆண்டு நவம்பர் மாதம் கட்சியின் செயற்குழுவைக் கூட்டினார். அதில் திராவிட நாட்டை வலியுறுத்தும் கட்சியின் 2வது விதி திருத்தப்பட்டது. “தமிழகம...

(சில இயக்கங்கள் தொடங்கப்படும் போது நமக்குள் எழும் கேள்விகள் எத்தனை அர்த்தம் உள்ளவையாக உள்ளன?இயக்குநர் சீமான் "நாம் தமிழர்" இயக்கத்தைத் தொடங்கும் தருணத்தில் (மே-18, 2010) ஈஅரங்கம் என்ற இணைய இதழில் வெளியான இந்தக் கட்டுரை, அத்தகைய கேள்விகளை மேலும் அர்த்தம் பொதிந்ததாக ஆக்குகிறது.)

நாம் தமிழர் இயக்கம் :     மாறும் போர் வடிவம்? (மே 18, 2010ல் வெளியானது) வரும் 18ம் தேதி தமிழகத்தில் மேலும் ஒரு புதிய அரசியல் கட்சி உதயமாகிறது. நாம் தமிழர் இயக்கத்தை அரசியல் கட்சியாக அறிவிப்பதன் மூலம், திரைப்பட இயக்குநராக இருந்த சீமான், தலைவராக பரிணாமம் அடைகிறார். எனினும், நடிகர் விஜயகாந்தின் தேமுதிகவைப் போல, உள்ளீடற்ற அரசியல் பதராக ‘நாம் தமிழர்’ இயக்கத்தை பார்க்க முடியாது. கடந்த ஆண்டு, தமிழீழத்திற்கான ஆயுதப்போராட்டம் முடிவுக்கு வந்த அதே மே மாதம் 18ம் தேதியன்று, இந்த நிகழ்வை ஏற்பாடு செய்திருப்பதன் மூலம், தமிழர்களின் அரசியல் போராட்டத்திற்கான பிரகடனமாகவே இதனைப் புரிந்து கொள்ள வேண்டி இருக்கிறது. 20 – 21ம் நூற்றாண்டுகளில், தமிழீழத்திற்காக  நடத்தப்பட்ட ஆயுதப்போராட்டத்தை, மூன்றாம் உலகத்தின், மிகப்பெரிய தேசிய இனப்போராட்டங்களில் ஒன்றாகவே வரலாறு பதிவு செய்யும் என்பதில் அய்யமில்லை. அத்தகைய ஆயுதப்போராட்டத்தின் முடிவுக்குப் பின்னர், அதன் தொப்புள் கொடி மண்ணான தமிழகத்தில் உதயமாவதாலேயே,  நாம் தமிழர் இயக்கம், மிக முக்கியமான கவனத்தை பெறுகிறது. எனினும்...

திராவிட இயக்க முன்னோடி டாக்டர் சி.நடேசன் : க.சோமாஸ்கந்தன்

  சிந்தனையாளன், 7, பிப்ரவரி 2017 அன்பும் அருளும் தயையும் நிறைந்த பெருந்தகை, பகையும் வஞ்சமும் இன்றி ஒளிர்ந்த ஒப்பற்ற மனிதர், பணம், பட்டம், பதவி, ஆட்சி அதிகாரம் என எதைப் பற்றியும் சிந்தியாது பொது நலமே தன் நலம் என்று வாழ்ந்த மாமனிதர், பிராமணரல்லாத மக்களின் வாழ் வியல் உரிமைகளுக்காகத் தம் வாழ்நாள் முழுவதும் உழைத்த உத்த மர் டாக்டர் சி. நடேசன் அவர்கள், திராவிட இயக்கத்தின் முன்னோடித் தலைவர்களில் முதல்வராகத் திகழ்ந்த வர். திருவல்லிக்கேணி பெரிய தெரு எனப்படும் வீரராகவ முதலியார் தெரு வில் வாழ்ந்த கிருஷ்ணசாமி முதலியாரின் புதல்வ ராக, 1875இல் நானிலம் போற்றும் நடேசன் பிறந்தார். திருவல்லிக்கேணியில் தொடக்கப் பள்ளியில் பயின்ற அவர் சென்னைப் பல்கலைக்கழகத் தில் இளங்கலை (BA) பட்டம் பெற்றார். பின்னர், ஆர். வெங்கடரத்தினம் நாயுடு தலைமையில் நடந்துவந்த பித்தாபுரம் மகாராஜ கல்லூரியில் உடலியல் (Physiology) விரிவுரையா ளராகச் சிறிது காலம் பணியாற்றினார். மருத்துவச் சேவை ஏழை எளியோர்க்குத் தொண்டு புரிய வேண்டும் என்ற எண்ணம் அவரிடம்  மேலோங்கி நின்றது. சேவை புரிதற்குரிய துறை மருத்துவத் துறை என உணர்ந் தார். சென்னை ம...