Skip to main content
26.12.10, தினமலர் செய்திமலர் நெல்லைப் பதிப்பில் வெளிவந்தது 

படித்தவர்கள்தான் செய்கிறார்கள்…!

“படித்தவன் பாவமும் சூதும் பண்ணினால்
போவான் போவான் ஐயோ என்று போவான்”

பசியும், பட்டினியுமாகச் செத்துப்போன மகாகவி பாரதியின் அழுத்தமான நம்பிக்கை இது.

இப்போது இந்த வரிகளுக்கு எந்த அளவு அர்த்தப் பொலிவு இருக்கிறது என்று தெரியவில்லை.

படிக்காதவன், ஓடும் பேருந்தில் ‘பிக்பாக்கெட்’ அடிக்கிறான். பூட்டியிருக்கும் வீட்டை உடைத்து கொள்ளையடிக்கிறான்.

அவனுடைய திருட்டின் எல்லை அவ்வளவுதான்.

படித்தவர்களும், பெரும் பதவியில் இருப்பவர்களும் செய்யும் திருட்டுகள் கற்பனைக்கு எட்டாதவையாக இருக்கின்றன.

சமூகத்தின் பெரும்பாலான சீரழிவுகளுக்கும் மெத்தப்படித்த மேல்தட்டினரே காரணமாக இருக்கிறார்கள் என்பது மீண்டும் ஒரு முறை நிரூபிக்கப்பட்டிருக்கிறது.

கடந்த 2001ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பின் படி, தமிழகத்தின் ஆண்டிப்பட்டி, உசிலம்பட்டி போன்ற பின் தங்கிய பகுதிகளில், 1000 ஆண்குழந்தைகளுக்கு சராசரியாக 925 முதல் 850 பெண்குழந்தைகள் மட்டுமே உள்ளதாக கூறப்பட்டது.

ஆனால், இப்போது நிலைமை தலைகீழாக மாறிவிட்டதாக, பெண் சிசுக்கொலைக்கு எதிரான பிரச்சாரத்தை மேற்கொண்டு வரும் அமைப்பு (Campain Against Sex selective Abortion) தெரிவித்துள்ளது.

சென்னையில் கடந்த வாரம் நடைபெற்ற இந்த அமைப்பின் கருத்தரங்கில், தமிழகம், ஆந்திரா, கேரளா, கர்நாடகா ஆகிய தென்மாநிலங்களைச் சேர்ந்த பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.

அந்தக் கருத்தரங்கில், பெண் சிசுக்கொலை  தொடர்பான அனைத்து அம்சங்கள் குறித்தும் விரிவாக விவாதிக்கப்பட்டது. அப்போது, இந்தப் பிரச்சனை தொடர்பாக கடந்த பத்தாண்டுகளில் ஏற்பட்டிருக்கும் எதிர்பாராத மாற்றங்கள் குறித்த அதிர்ச்சி தகவல்கள் தெரியவந்தன.

6 வயதுக்கு உட்பட்ட ஆயிரம் ஆண் பெண் குழுந்தைகளின் பாலின சதவீதம், பெருநகரங்களை விட, மலைவாழ் மக்கள் வசிக்கும் பகுதியில் மேம்பாடு அடைந்துள்ளதாக, இதில் கலந்து கொண்ட தமிழ்நாடு தொழில்துறை முதலீட்டுக் கழகத் தலைவர் ஷீலாராணி சுங்கத் தெரிவித்துள்ளார்.

கடந்த 2001ம் ஆண்டில், பாலின விகிதத்தில்  மிக மோசமாகக் காணப்பட்ட தர்மபுரி, சேலம், மதுரை, கடலூர் மாவட்டங்களில், தற்போது நல்ல முன்னேற்றம் காணப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.

மலைவாழ் மக்கள் அதிகம் வசிக்கும் நீலகிரி மாவட்டத்தில் 1000 ஆண்குழந்தைகளுக்கு, 976 பெண்குழந்தைகள் என்ற அளவில் தற்போது பாலின விகிதம் மேம்பட்டிருப்பதையும், அந்தக் கருத்தரங்கில் கலந்து கொண்டவர்கள் சுட்டிக்காட்டினர்.

ஆனால், கல்வி அறிவில் தன்னிறைவு பெற்றதாக கருதப்படும் கேரள மாநிலத்தின் எர்ணாகுளம், வயநாடு, தகவல் தொழில் நுட்ப வளர்ச்சியில் முன்னேறிய நகரமாக கருதப்படும் ஆந்திர மாநிலத்தின் ஹைதராபாத் போன்ற பெருநகரங்களில் பாலின விகிதம், படுவேகமாக சரிந்து கொண்டிருப்பதாகவும் அவர்கள் கவலை தெரிவித்தனர்.

கல்வி அறிவில் முன்னேறாத மாநிலங்களைக் காட்டிலும், முன்னேறிய மாநிலங்களில், சிசுவிலேயே பாலினத்தை அறிந்து கொலை செய்யும் போக்கு அதிகரித்திருப்பதாக அவர்கள் அதிர்ச்சி தெரிவித்தனர்.

இதற்குக் காரணம் நகரங்கள், மற்றும் சிறு நகரங்களில் சட்ட விரோதமாக கருச்சிதைவு செய்யும் ஸ்கேன் மையங்கள் நிறைய இருப்பதே காரணம் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.
தமிழகத்தில் உள்ள ஸ்கேன் மையங்களில் மூன்றில் ஒரு பங்கு மையங்கள் மட்டுமே, எத்தனை கருச்சிதைவு செய்யப்பட்டது என்பது குறித்த அறிக்கையை அரசுக்கு அனுப்பும் வழக்கத்தைக் கொண்டிருப்பதாக, சமூக ஆர்வலர் ரஞ்சனி மூர்த்தி தெரிவித்துள்ளார்.

கருவுற்று 12 வாரங்களுக்குப் பின்னர் கருச்சிதைவு செய்ய வேண்டும் என்றால், சட்டப்படி அதற்கான உரிமம் பெற்ற அரசு மருத்துவமனைகளை மட்டுமே அணுக வேண்டும் என்ற நிலையிலும், பெரும்பாலும் யாரும் அதனைப் பின்பற்றுவதில்லை என்பதையும் அவர் சுட்டிக்காட்டி உள்ளார்.

மிகவும் தாழ்த்தப்பட்ட ஏழை எளிய சமூகத்தைச் சேர்ந்தவர்களை விட, நடுத்தர மற்றும் மேல்தட்டு குடும்பங்களில்தான் வரதட்சணை என்பது, இன்றும் பெரிய அளவில் கோலோச்சி வருவதாக, இந்தக் கருத்தரங்கில் கலந்து கொண்ட பெரும்பாலான சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

இத்தகைய குடும்பங்களில் பெண்ணுக்குத் திருமணம் செய்வது செலவு மிகுந்த ஆட்பரச் சடங்காகவே  உருவெடுத்திருப்பது, பெண் குழந்தைகள் குறித்த உள்ளார்ந்த அச்சத்தை ஏற்படுத்தி வருவதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.

மேலும், கருவில் இருக்கும் குழந்தையை ஆணா, பெண்ணா என்று கண்டறியும் தொழில் நுட்பத்தை, எளிய மக்களைவிட, படித்த மேல்தட்டு சமூகத்தினரே அதிக அளவில் பயன்படுத்தி வருவதாகவும், அவர்கள் தெரிவிக்கிறார்கள்.
உண்மைதானே!

பெரும்பாலான மலைக் கிராமங்களில், பிரசவ நேரத்தில் பெண்களை மருத்துவ மனைக்கு அழைத்துச் செல்லக்கூட சாலை வசதியோ, வாகன வசதியோ இல்லாத நிலையில், கருவில் இருக்கும் குழந்தையின் பாலினத்தைக் கண்டறிய அவர்கள் எங்கே போவார்கள்?

படித்தறிந்த மேல் தட்டினர், மிக இயல்பாக, எந்தச் சங்கடமும் இன்றி, நெல்மணியோ, கள்ளிப்பாலோ இல்லாமல் பெண் சிசுவைக் கருவிலேயே கண்டறிந்து ஒழித்து வருகின்றனர் என்ற உண்மை, நமக்கு அதிர்ச்சியை விட வேதனையையே அதிகம் தருகிறது.

வரதட்சணை என்ற மோசமான கலாச்சார நோயே, இன்றுவரை பெண்சிசுக் கொலைக்கு ஆதார வேராக இருந்து வருகிறது என்ற உண்மை தற்போது மேலும் உறுதிப்பட்டு வருகிறது.

வடிவங்கள் மாறலாம். ஆனால் வரதட்சணை என்ற வக்கிரம் மாறவில்லை. படித்தவர்களும் கூட சிசுவென்றும் பாராமல், பெண்ணைக் கருவிலேயே கண்டறிந்து கொல்லும் மூர்க்கம், இன்றும் தணியாததற்கு இதுவே காரணமாக உள்ளது.

நுனிநாக்கு ஆங்கிலமும், நவநாகரிக உடையுமாக தோற்றத்தில் மட்டுமே தங்களைப் புதுமை விரும்பிகளாய்க் காட்டிக் கொண்டு அலையும் இவர்கள், சிந்தனை அளவில், பெண்கள் குறித்த பார்வையில், பல ஆயிரம் ஆண்டு பின்தங்கிய பழமைவாதிகள் என்பதே உண்மை.

இவர்களோடு ஒப்பிடும் போது, ‘பெண்ணின் பெருந்தக்க யாவுள’ என்று ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே பெருமிதம் பொங்க கேள்வி எழுப்பிய வள்ளுவன் இன்றும் நமக்குப் புதியவனாகத் தெரிவதில் வியப்பில்லை!

பாவம் பாரதி. படித்தவர்கள் மீதுதான் அவனுக்கு எத்தனை நம்பிக்கை.

மேனா.உலகநாதன்

Comments

Popular posts from this blog

அரசியல் பேசுவோம் -14 – அண்ணா நிகழ்த்திய அரசியல் வேதிவினை! : செம்பரிதி

1962ம் ஆண்டு மார்ச் 15ம் தேதி காமராஜர், மீண்டும் தமிழகத்தின் முதலமைச்சரானார். பக்தவச்சலம், கக்கன் உள்ளிட்டோர் அவரது அமைச்சரவையில் இடம்பெற்றனர். திருச்செங்கோடு இடைத்தேர்தலில் திமுக பெற்ற வெற்றி மாநில காங்கிரசாரை மட்டுமின்றி, மத்தியில் உள்ளவர்களையும் மலைக்க வைத்தது. விளைவு பிரிவினை கட்சிகளை சட்டவிரோத இயக்கமாக அறிவிக்கும் மசோதாவை காங்கிரஸ் அரசு நிறைவேற்றியது. நாடாளுமன்றத்தில் அதனை அண்ணா எதிர்த்துப் பேசினாலும், மசோதா நிறைவேற்றத்தைத் தடுக்க முடியவில்லை. அடுத்த கட்டமாக பிரிவினைத் தடைச்சட்டத்தை எதிர்கொள்வதற்கான வியூகத்தை வகுகக் வேண்டிய நெருக்கடி அண்ணாவுக்கு ஏற்பட்டது. கட்சியினரைத் தனித்தனியாகவும் ,அமைப்பு ரீதியாகவும், குழுக்களாகவும் அழைத்து பிரிவினைத் தடைச்சட்டம் குறித்து ஆலோசனை நடத்தினார் அண்ணா. கட்சியின் அடிப்படை விதிகளில் ஒன்றாக இருந்த திராவிடநாடு கோரும் பிரிவைத் திருத்த வேண்டிய நிலை ஏற்பட்டிருப்பதை அவர்களுக்கு எடுத்துரைத்தார். முடிவாக 1963ம் ஆண்டு நவம்பர் மாதம் கட்சியின் செயற்குழுவைக் கூட்டினார். அதில் திராவிட நாட்டை வலியுறுத்தும் கட்சியின் 2வது விதி திருத்தப்பட்டது. “தமிழகம...

(சில இயக்கங்கள் தொடங்கப்படும் போது நமக்குள் எழும் கேள்விகள் எத்தனை அர்த்தம் உள்ளவையாக உள்ளன?இயக்குநர் சீமான் "நாம் தமிழர்" இயக்கத்தைத் தொடங்கும் தருணத்தில் (மே-18, 2010) ஈஅரங்கம் என்ற இணைய இதழில் வெளியான இந்தக் கட்டுரை, அத்தகைய கேள்விகளை மேலும் அர்த்தம் பொதிந்ததாக ஆக்குகிறது.)

நாம் தமிழர் இயக்கம் :     மாறும் போர் வடிவம்? (மே 18, 2010ல் வெளியானது) வரும் 18ம் தேதி தமிழகத்தில் மேலும் ஒரு புதிய அரசியல் கட்சி உதயமாகிறது. நாம் தமிழர் இயக்கத்தை அரசியல் கட்சியாக அறிவிப்பதன் மூலம், திரைப்பட இயக்குநராக இருந்த சீமான், தலைவராக பரிணாமம் அடைகிறார். எனினும், நடிகர் விஜயகாந்தின் தேமுதிகவைப் போல, உள்ளீடற்ற அரசியல் பதராக ‘நாம் தமிழர்’ இயக்கத்தை பார்க்க முடியாது. கடந்த ஆண்டு, தமிழீழத்திற்கான ஆயுதப்போராட்டம் முடிவுக்கு வந்த அதே மே மாதம் 18ம் தேதியன்று, இந்த நிகழ்வை ஏற்பாடு செய்திருப்பதன் மூலம், தமிழர்களின் அரசியல் போராட்டத்திற்கான பிரகடனமாகவே இதனைப் புரிந்து கொள்ள வேண்டி இருக்கிறது. 20 – 21ம் நூற்றாண்டுகளில், தமிழீழத்திற்காக  நடத்தப்பட்ட ஆயுதப்போராட்டத்தை, மூன்றாம் உலகத்தின், மிகப்பெரிய தேசிய இனப்போராட்டங்களில் ஒன்றாகவே வரலாறு பதிவு செய்யும் என்பதில் அய்யமில்லை. அத்தகைய ஆயுதப்போராட்டத்தின் முடிவுக்குப் பின்னர், அதன் தொப்புள் கொடி மண்ணான தமிழகத்தில் உதயமாவதாலேயே,  நாம் தமிழர் இயக்கம், மிக முக்கியமான கவனத்தை பெறுகிறது. எனினும்...

திராவிட இயக்க முன்னோடி டாக்டர் சி.நடேசன் : க.சோமாஸ்கந்தன்

  சிந்தனையாளன், 7, பிப்ரவரி 2017 அன்பும் அருளும் தயையும் நிறைந்த பெருந்தகை, பகையும் வஞ்சமும் இன்றி ஒளிர்ந்த ஒப்பற்ற மனிதர், பணம், பட்டம், பதவி, ஆட்சி அதிகாரம் என எதைப் பற்றியும் சிந்தியாது பொது நலமே தன் நலம் என்று வாழ்ந்த மாமனிதர், பிராமணரல்லாத மக்களின் வாழ் வியல் உரிமைகளுக்காகத் தம் வாழ்நாள் முழுவதும் உழைத்த உத்த மர் டாக்டர் சி. நடேசன் அவர்கள், திராவிட இயக்கத்தின் முன்னோடித் தலைவர்களில் முதல்வராகத் திகழ்ந்த வர். திருவல்லிக்கேணி பெரிய தெரு எனப்படும் வீரராகவ முதலியார் தெரு வில் வாழ்ந்த கிருஷ்ணசாமி முதலியாரின் புதல்வ ராக, 1875இல் நானிலம் போற்றும் நடேசன் பிறந்தார். திருவல்லிக்கேணியில் தொடக்கப் பள்ளியில் பயின்ற அவர் சென்னைப் பல்கலைக்கழகத் தில் இளங்கலை (BA) பட்டம் பெற்றார். பின்னர், ஆர். வெங்கடரத்தினம் நாயுடு தலைமையில் நடந்துவந்த பித்தாபுரம் மகாராஜ கல்லூரியில் உடலியல் (Physiology) விரிவுரையா ளராகச் சிறிது காலம் பணியாற்றினார். மருத்துவச் சேவை ஏழை எளியோர்க்குத் தொண்டு புரிய வேண்டும் என்ற எண்ணம் அவரிடம்  மேலோங்கி நின்றது. சேவை புரிதற்குரிய துறை மருத்துவத் துறை என உணர்ந் தார். சென்னை ம...