26.12.10, தினமலர் செய்திமலர் நெல்லைப் பதிப்பில் வெளிவந்தது
படித்தவர்கள்தான் செய்கிறார்கள்…!
“படித்தவன் பாவமும் சூதும் பண்ணினால்
போவான் போவான் ஐயோ என்று போவான்”
பசியும், பட்டினியுமாகச் செத்துப்போன மகாகவி பாரதியின் அழுத்தமான நம்பிக்கை இது.
இப்போது இந்த வரிகளுக்கு எந்த அளவு அர்த்தப் பொலிவு இருக்கிறது என்று தெரியவில்லை.
படிக்காதவன், ஓடும் பேருந்தில் ‘பிக்பாக்கெட்’ அடிக்கிறான். பூட்டியிருக்கும் வீட்டை உடைத்து கொள்ளையடிக்கிறான்.
அவனுடைய திருட்டின் எல்லை அவ்வளவுதான்.
படித்தவர்களும், பெரும் பதவியில் இருப்பவர்களும் செய்யும் திருட்டுகள் கற்பனைக்கு எட்டாதவையாக இருக்கின்றன.
சமூகத்தின் பெரும்பாலான சீரழிவுகளுக்கும் மெத்தப்படித்த மேல்தட்டினரே காரணமாக இருக்கிறார்கள் என்பது மீண்டும் ஒரு முறை நிரூபிக்கப்பட்டிருக்கிறது.
கடந்த 2001ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பின் படி, தமிழகத்தின் ஆண்டிப்பட்டி, உசிலம்பட்டி போன்ற பின் தங்கிய பகுதிகளில், 1000 ஆண்குழந்தைகளுக்கு சராசரியாக 925 முதல் 850 பெண்குழந்தைகள் மட்டுமே உள்ளதாக கூறப்பட்டது.
ஆனால், இப்போது நிலைமை தலைகீழாக மாறிவிட்டதாக, பெண் சிசுக்கொலைக்கு எதிரான பிரச்சாரத்தை மேற்கொண்டு வரும் அமைப்பு (Campain Against Sex selective Abortion) தெரிவித்துள்ளது.
சென்னையில் கடந்த வாரம் நடைபெற்ற இந்த அமைப்பின் கருத்தரங்கில், தமிழகம், ஆந்திரா, கேரளா, கர்நாடகா ஆகிய தென்மாநிலங்களைச் சேர்ந்த பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.
அந்தக் கருத்தரங்கில், பெண் சிசுக்கொலை தொடர்பான அனைத்து அம்சங்கள் குறித்தும் விரிவாக விவாதிக்கப்பட்டது. அப்போது, இந்தப் பிரச்சனை தொடர்பாக கடந்த பத்தாண்டுகளில் ஏற்பட்டிருக்கும் எதிர்பாராத மாற்றங்கள் குறித்த அதிர்ச்சி தகவல்கள் தெரியவந்தன.
6 வயதுக்கு உட்பட்ட ஆயிரம் ஆண் பெண் குழுந்தைகளின் பாலின சதவீதம், பெருநகரங்களை விட, மலைவாழ் மக்கள் வசிக்கும் பகுதியில் மேம்பாடு அடைந்துள்ளதாக, இதில் கலந்து கொண்ட தமிழ்நாடு தொழில்துறை முதலீட்டுக் கழகத் தலைவர் ஷீலாராணி சுங்கத் தெரிவித்துள்ளார்.
கடந்த 2001ம் ஆண்டில், பாலின விகிதத்தில் மிக மோசமாகக் காணப்பட்ட தர்மபுரி, சேலம், மதுரை, கடலூர் மாவட்டங்களில், தற்போது நல்ல முன்னேற்றம் காணப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.
மலைவாழ் மக்கள் அதிகம் வசிக்கும் நீலகிரி மாவட்டத்தில் 1000 ஆண்குழந்தைகளுக்கு, 976 பெண்குழந்தைகள் என்ற அளவில் தற்போது பாலின விகிதம் மேம்பட்டிருப்பதையும், அந்தக் கருத்தரங்கில் கலந்து கொண்டவர்கள் சுட்டிக்காட்டினர்.
ஆனால், கல்வி அறிவில் தன்னிறைவு பெற்றதாக கருதப்படும் கேரள மாநிலத்தின் எர்ணாகுளம், வயநாடு, தகவல் தொழில் நுட்ப வளர்ச்சியில் முன்னேறிய நகரமாக கருதப்படும் ஆந்திர மாநிலத்தின் ஹைதராபாத் போன்ற பெருநகரங்களில் பாலின விகிதம், படுவேகமாக சரிந்து கொண்டிருப்பதாகவும் அவர்கள் கவலை தெரிவித்தனர்.
கல்வி அறிவில் முன்னேறாத மாநிலங்களைக் காட்டிலும், முன்னேறிய மாநிலங்களில், சிசுவிலேயே பாலினத்தை அறிந்து கொலை செய்யும் போக்கு அதிகரித்திருப்பதாக அவர்கள் அதிர்ச்சி தெரிவித்தனர்.
இதற்குக் காரணம் நகரங்கள், மற்றும் சிறு நகரங்களில் சட்ட விரோதமாக கருச்சிதைவு செய்யும் ஸ்கேன் மையங்கள் நிறைய இருப்பதே காரணம் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.
தமிழகத்தில் உள்ள ஸ்கேன் மையங்களில் மூன்றில் ஒரு பங்கு மையங்கள் மட்டுமே, எத்தனை கருச்சிதைவு செய்யப்பட்டது என்பது குறித்த அறிக்கையை அரசுக்கு அனுப்பும் வழக்கத்தைக் கொண்டிருப்பதாக, சமூக ஆர்வலர் ரஞ்சனி மூர்த்தி தெரிவித்துள்ளார்.
கருவுற்று 12 வாரங்களுக்குப் பின்னர் கருச்சிதைவு செய்ய வேண்டும் என்றால், சட்டப்படி அதற்கான உரிமம் பெற்ற அரசு மருத்துவமனைகளை மட்டுமே அணுக வேண்டும் என்ற நிலையிலும், பெரும்பாலும் யாரும் அதனைப் பின்பற்றுவதில்லை என்பதையும் அவர் சுட்டிக்காட்டி உள்ளார்.
மிகவும் தாழ்த்தப்பட்ட ஏழை எளிய சமூகத்தைச் சேர்ந்தவர்களை விட, நடுத்தர மற்றும் மேல்தட்டு குடும்பங்களில்தான் வரதட்சணை என்பது, இன்றும் பெரிய அளவில் கோலோச்சி வருவதாக, இந்தக் கருத்தரங்கில் கலந்து கொண்ட பெரும்பாலான சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
இத்தகைய குடும்பங்களில் பெண்ணுக்குத் திருமணம் செய்வது செலவு மிகுந்த ஆட்பரச் சடங்காகவே உருவெடுத்திருப்பது, பெண் குழந்தைகள் குறித்த உள்ளார்ந்த அச்சத்தை ஏற்படுத்தி வருவதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.
மேலும், கருவில் இருக்கும் குழந்தையை ஆணா, பெண்ணா என்று கண்டறியும் தொழில் நுட்பத்தை, எளிய மக்களைவிட, படித்த மேல்தட்டு சமூகத்தினரே அதிக அளவில் பயன்படுத்தி வருவதாகவும், அவர்கள் தெரிவிக்கிறார்கள்.
உண்மைதானே!
பெரும்பாலான மலைக் கிராமங்களில், பிரசவ நேரத்தில் பெண்களை மருத்துவ மனைக்கு அழைத்துச் செல்லக்கூட சாலை வசதியோ, வாகன வசதியோ இல்லாத நிலையில், கருவில் இருக்கும் குழந்தையின் பாலினத்தைக் கண்டறிய அவர்கள் எங்கே போவார்கள்?
படித்தறிந்த மேல் தட்டினர், மிக இயல்பாக, எந்தச் சங்கடமும் இன்றி, நெல்மணியோ, கள்ளிப்பாலோ இல்லாமல் பெண் சிசுவைக் கருவிலேயே கண்டறிந்து ஒழித்து வருகின்றனர் என்ற உண்மை, நமக்கு அதிர்ச்சியை விட வேதனையையே அதிகம் தருகிறது.
வரதட்சணை என்ற மோசமான கலாச்சார நோயே, இன்றுவரை பெண்சிசுக் கொலைக்கு ஆதார வேராக இருந்து வருகிறது என்ற உண்மை தற்போது மேலும் உறுதிப்பட்டு வருகிறது.
வடிவங்கள் மாறலாம். ஆனால் வரதட்சணை என்ற வக்கிரம் மாறவில்லை. படித்தவர்களும் கூட சிசுவென்றும் பாராமல், பெண்ணைக் கருவிலேயே கண்டறிந்து கொல்லும் மூர்க்கம், இன்றும் தணியாததற்கு இதுவே காரணமாக உள்ளது.
நுனிநாக்கு ஆங்கிலமும், நவநாகரிக உடையுமாக தோற்றத்தில் மட்டுமே தங்களைப் புதுமை விரும்பிகளாய்க் காட்டிக் கொண்டு அலையும் இவர்கள், சிந்தனை அளவில், பெண்கள் குறித்த பார்வையில், பல ஆயிரம் ஆண்டு பின்தங்கிய பழமைவாதிகள் என்பதே உண்மை.
இவர்களோடு ஒப்பிடும் போது, ‘பெண்ணின் பெருந்தக்க யாவுள’ என்று ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே பெருமிதம் பொங்க கேள்வி எழுப்பிய வள்ளுவன் இன்றும் நமக்குப் புதியவனாகத் தெரிவதில் வியப்பில்லை!
பாவம் பாரதி. படித்தவர்கள் மீதுதான் அவனுக்கு எத்தனை நம்பிக்கை.
மேனா.உலகநாதன்
Comments
Post a Comment