Skip to main content

தீண்டப்படாத தீண்டாமை ஒழிப்பு!



கடந்த 3.10.10ல் பிரசுராமான கட்டுரை....

ஒரு வழியாக மாகாத்மா காந்தியின் 141வது பிறந்த தினத்தையும் கொண்டாடித் தீர்த்துவிட்டோம்.
சும்மா சொல்லக்கூடாது.
குளு குளு நடிகைகள் ‘கொஞ்சும் தமிழில்’ பேசும் பேட்டி என்ன, புதிய திரைப்படங்கள் குறித்த வசீகர விமர்சனங்கள் என்ன… இந்தியத் தொலைக்காட்சி வரலாற்றின் சிலமாதங்களுக்கு முன்னரே வந்த திரைப்படங்கள் என்ன… என  இப்படிப் பல என்ன என்னக்களோடு, கோவணமும், கைத்தடியுமாய் அலைந்த காந்தியின் பிறந்தநாளை டிஜிட்டல் குவாலிட்டியில் கொண்டாடித் தீர்த்துவிட்டோம்.
இவ்வளவு குதூகல கொண்டாட்ட களேபரங்களுக்கு இடையே, பெரியார் திராவிடர் கழகம் என்ற அமைப்பு திருச்சியில் நடத்திய தீண்டாமை ஒழிப்புப் பிரிவை இழுத்து மூடும் போராட்டம், நம் கவனத்தை ஈர்த்ததுடன், அழுத்தமான கவலைகளையும் ஏற்படுத்தியது.
ஏன்… காமன்வெல்த் ஊழல்களைவிட மோசமாக நம்மை வெட்கித் தலைகுனிய வைத்தது என்று கூடச் சொல்லலாம். காந்தி அடிகள் தன் கடைசி மூச்சுவரை உச்சரித்துக் கொண்டிருந்த இலட்சியச் சொல், தீண்டாமை ஒழிப்பு. நமது கெடுவாய்ப்பு, அது இன்றுவரை இலட்சியமாக மட்டுமே இருந்து வருவதுதான்.
தீண்டாமை எனும் தேசிய அவமானம், இன்னும் நீடிக்கிறது என்று உயர்நீதிமன்ற நீதிபதிகளே குமுறுகிறார்கள்.
 “மாநிலத்தின் அதிகாரத்திலுள்ள தீண்டாமை தடுப்புச் சட்டங்கள் முழுமையாக அமல்படுத்தப்பட வேண்டும். தலித் மக்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியை காமன்வெல்த் விளையாட்டுகளுக்கு திருப்பிவிட்டது தவறுஎன்று, உள்துறை அமைச்சர் ப. சிதம்பரமும் கொந்தளிக்கிறார்.
ஆனாலும் என்ன? தமிழகம் முழுவதும் இரட்டைக் குவளைமுறை நடைமுறையில் உள்ள கிராமங்கள் இன்னும் இருக்கத்தான் செய்கின்றன. சிற்றூராட்சிகளில், தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த ஒருவர், தேர்தலில் ஊராட்சித்தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டால், அவர் அந்தப் பதவியில் அமர முடிவதில்லை.
இவையெல்லாம் ஆண்டாண்டுகாலமாக தொடர்ந்து கொண்டு இருப்பவைதானே… என்று கேட்கலாம். அப்படித் தொடர்வதுதான் வேதனைக்குரியது.
ஆனால், அண்மையில் வெளிவந்துள்ள  மற்றொரு தகவல் தீண்டாமையின் மற்றொரு கோரமுகத்தை நமக்கு வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.
திருச்சியில், ‘வேர்அவுஸ் கல்லறைஎன்று அழைக்கப்படும், கத்தோலிக்கர்களின் கல்லறையில், தீண்டப்படாத மக்களின் பிணங்களை அடக்கம் செய்ய தனி இடம் அமைக்கப்பட்டு, அதனைத் தனியே பிரித்துக் காட்டுவதற்காக குறுக்குச் சுவர் ஒன்றும் எழுப்பப்பட்டுள்ளது வெளி உலகின் கவனத்திற்கு வந்துள்ளது.
பாலக்கரை என்று அழைக்கப்படும் பகுதியில் மேலப்புதூர் பாலம் அருகே இந்தக் கல்லறை அமைந்துள்ளது. திருச்சி மாநகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள இந்தக் கல்லறை, பழைய கோயில் என்று அழைக்கப்படும் திருச்சபையின் கட்டுப்பாட்டில் உள்ளது. மறைந்த திருச்சி லூர்துசாமி என்பவர் நன்கொடையாக வழங்கிய இடத்தில் அமைந்துள்ள இந்தக் கல்லறைதான், தீண்டாமையை குறுக்குச் சுவர் வடிவத்தில் உலகிற்கு பறைசாற்றிக் கொண்டிருக்கிறது.
 உப்புப் பாறை, செங்குளம் தாழ்த்தப்பட்டோர் குடியிருப்பு, மல்லிகைபுரம், ஜெம்ஸ் டவுன், கூனி பசார், காஜாபேட்டை பகுதிகளில் வாழும், தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த மக்களின் பிணங்கள், குறுக்குச் சுவர் அமைக்கப்பட்ட  ஒரு பகுதி கல்லறையிலும், மறுபுறத்தில் உள்ள கல்லறையில், “பழைய கோயில்பகுதி இருதயபுரம், எடத்தெரு வாழும் பகுதிகளில் உயர்சாதியினர் என்று கூறிக் கொள்ளும், கிறிஸ்தவர்களின் பிணங்களும் புதைக்கப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது. இரண்டு கல்லறை களிலும் யேசுவின் புனித சிலுவைச் சின்னம்தான் பொறிக்கப்பட்டுள்ளது. இரண்டு பிரிவினரும், ரோமன் கத்தோலிக்கப் பிரிவைச் சார்ந்தவர்கள்தான்.
மதமும், கடவுளும் ஒன்றாக இருந்தாலும், சாதியை வேறுபடுத்தும் குரூரம், கிறிஸ்தவர்கள் மத்தியிலும் தொடங்கி இருப்பதுதான் நமக்கு அதிர்ச்சி அளிக்கிறது.
இது குறித்து விழிப்புணர்வுப் பிரச்சாரங்களையும், ஆர்ப்பாட்டங்களையும் நடத்திய பெரியார் திராவிட கழகத்தினர், மாவட்டக் காவல்துறையின் தீண்டாமை ஒழிப்புப் பிரிவான மனித உரிமைப் பாதுகாப்புபிரிவு அதிகாரியை, கடந்த மார்ச் 14 ஆம் தேதி நேரில் சந்தித்து புகாரும் அளித்துள்ளனர்.
ஆனால், இது தொடர்பாக காவல்துறையின் தீண்டாமை ஒழிப்புப் பிரிவு எந்த நடவடிக்கையும் எடுக்காததால், அப்பிரிவை இழுத்து மூடும் போராட்டத்தில் அந்த அமைப்பினர் நேற்று ஈடுபட்டுள்ளனர். 
 “காவல்துறை நடவடிக்கை ஒரு பக்கம் இருந்தாலும், கிறிஸ்தவ மதக்கோட்பாட்டுக்கு எதிரானதும், சட்டவிரோதமானதுமான இந்தத் தீண்டாமைச் சுவரை அகற்ற நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி,  ரோமன் கத்தோலிக்க மதப் பிரிவுத் தலைவர்களுக்கும் அவர்கள் கடிதம் எழுதி உள்ளனர்.
இந்த தகவலை அறிந்த பின்னர், திருச்சியிலும் ஓர் உத்தபுரமா? அதுவும் கிறிஸ்தவர்களின் கல்லறைத் தோட்டத்தில்… என்ற அதிர்ச்சி நம்மை உறைய வைக்கிறது.
காந்தி ஒருபக்கம் ராமராஜ்ஜியத்தைக் கனவுகண்டாலும், தீண்டாமை ஒழிப்பு என்பது அவரது முக்கிய வேலைத்திட்டங்களில் ஒன்றாக இருந்தது என்பதை மறுக்க முடியாது.
அவரது பெயரைச் சொல்லி ஆட்சி நடத்திவரும் காங்கிரஸ் கட்சியினரும், ப.சிதம்பரம் போன்ற அதன் தற்போதைய தலைவர்களும் கூட, தவிர்க்க முடியாமல் அதனை அவ்வப்போது உச்சரித்து வருவதைப் பாரக்க முடிகிறது.
ஆனால், தமிழகத்தில், காமராஜர் (?) ஆட்சி அமைக்கத்துடிக்கும் காங்கிரஸ்காரர்களும் சரி, 40 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சி நடத்திவருபவரும் திராவிட இயக்கத்தினரும் சரி, தீண்டாமை குறித்து பெரிய அளவில் கவலை கொண்டதாகத் தெரியவில்லை.
பாட்டாளி வர்க்க சர்வதேசியம் தமிழகத்தில் கைகொடுக்கத் தவறிய நிலையில், இடதுசாரிகள் அண்மைக்காலமாக தீண்டாமை ஓழிப்பு முழக்கங்களை முன்னெடுத்து வருகிறார்கள்.
பெரியார் திராவிட கழகம் போன்ற அமைப்புகள் எப்போதும் போல, தீண்டாமைக்கு எதிரான தங்களது போராட்டங்களை தீவிரமாக முன்னெடுத்து வருகின்றன.
யார் முன்னெடுத்தாலும் சரிதான். தீண்டாமை எனும் சமூகப் பேரிழிவு ஒழிந்தால் போதும் என்பதுதான், சமூக ஆர்வலர்களின் பெருவிருப்பமும், நிறைவேறாத நெடுங்கனவும் ஆகும்!
மேனா.உலகநாதன்.
                                        

Comments

Popular posts from this blog

அரசியல் பேசுவோம் -14 – அண்ணா நிகழ்த்திய அரசியல் வேதிவினை! : செம்பரிதி

1962ம் ஆண்டு மார்ச் 15ம் தேதி காமராஜர், மீண்டும் தமிழகத்தின் முதலமைச்சரானார். பக்தவச்சலம், கக்கன் உள்ளிட்டோர் அவரது அமைச்சரவையில் இடம்பெற்றனர். திருச்செங்கோடு இடைத்தேர்தலில் திமுக பெற்ற வெற்றி மாநில காங்கிரசாரை மட்டுமின்றி, மத்தியில் உள்ளவர்களையும் மலைக்க வைத்தது. விளைவு பிரிவினை கட்சிகளை சட்டவிரோத இயக்கமாக அறிவிக்கும் மசோதாவை காங்கிரஸ் அரசு நிறைவேற்றியது. நாடாளுமன்றத்தில் அதனை அண்ணா எதிர்த்துப் பேசினாலும், மசோதா நிறைவேற்றத்தைத் தடுக்க முடியவில்லை. அடுத்த கட்டமாக பிரிவினைத் தடைச்சட்டத்தை எதிர்கொள்வதற்கான வியூகத்தை வகுகக் வேண்டிய நெருக்கடி அண்ணாவுக்கு ஏற்பட்டது. கட்சியினரைத் தனித்தனியாகவும் ,அமைப்பு ரீதியாகவும், குழுக்களாகவும் அழைத்து பிரிவினைத் தடைச்சட்டம் குறித்து ஆலோசனை நடத்தினார் அண்ணா. கட்சியின் அடிப்படை விதிகளில் ஒன்றாக இருந்த திராவிடநாடு கோரும் பிரிவைத் திருத்த வேண்டிய நிலை ஏற்பட்டிருப்பதை அவர்களுக்கு எடுத்துரைத்தார். முடிவாக 1963ம் ஆண்டு நவம்பர் மாதம் கட்சியின் செயற்குழுவைக் கூட்டினார். அதில் திராவிட நாட்டை வலியுறுத்தும் கட்சியின் 2வது விதி திருத்தப்பட்டது. “தமிழகம...

(சில இயக்கங்கள் தொடங்கப்படும் போது நமக்குள் எழும் கேள்விகள் எத்தனை அர்த்தம் உள்ளவையாக உள்ளன?இயக்குநர் சீமான் "நாம் தமிழர்" இயக்கத்தைத் தொடங்கும் தருணத்தில் (மே-18, 2010) ஈஅரங்கம் என்ற இணைய இதழில் வெளியான இந்தக் கட்டுரை, அத்தகைய கேள்விகளை மேலும் அர்த்தம் பொதிந்ததாக ஆக்குகிறது.)

நாம் தமிழர் இயக்கம் :     மாறும் போர் வடிவம்? (மே 18, 2010ல் வெளியானது) வரும் 18ம் தேதி தமிழகத்தில் மேலும் ஒரு புதிய அரசியல் கட்சி உதயமாகிறது. நாம் தமிழர் இயக்கத்தை அரசியல் கட்சியாக அறிவிப்பதன் மூலம், திரைப்பட இயக்குநராக இருந்த சீமான், தலைவராக பரிணாமம் அடைகிறார். எனினும், நடிகர் விஜயகாந்தின் தேமுதிகவைப் போல, உள்ளீடற்ற அரசியல் பதராக ‘நாம் தமிழர்’ இயக்கத்தை பார்க்க முடியாது. கடந்த ஆண்டு, தமிழீழத்திற்கான ஆயுதப்போராட்டம் முடிவுக்கு வந்த அதே மே மாதம் 18ம் தேதியன்று, இந்த நிகழ்வை ஏற்பாடு செய்திருப்பதன் மூலம், தமிழர்களின் அரசியல் போராட்டத்திற்கான பிரகடனமாகவே இதனைப் புரிந்து கொள்ள வேண்டி இருக்கிறது. 20 – 21ம் நூற்றாண்டுகளில், தமிழீழத்திற்காக  நடத்தப்பட்ட ஆயுதப்போராட்டத்தை, மூன்றாம் உலகத்தின், மிகப்பெரிய தேசிய இனப்போராட்டங்களில் ஒன்றாகவே வரலாறு பதிவு செய்யும் என்பதில் அய்யமில்லை. அத்தகைய ஆயுதப்போராட்டத்தின் முடிவுக்குப் பின்னர், அதன் தொப்புள் கொடி மண்ணான தமிழகத்தில் உதயமாவதாலேயே,  நாம் தமிழர் இயக்கம், மிக முக்கியமான கவனத்தை பெறுகிறது. எனினும்...

திராவிட இயக்க முன்னோடி டாக்டர் சி.நடேசன் : க.சோமாஸ்கந்தன்

  சிந்தனையாளன், 7, பிப்ரவரி 2017 அன்பும் அருளும் தயையும் நிறைந்த பெருந்தகை, பகையும் வஞ்சமும் இன்றி ஒளிர்ந்த ஒப்பற்ற மனிதர், பணம், பட்டம், பதவி, ஆட்சி அதிகாரம் என எதைப் பற்றியும் சிந்தியாது பொது நலமே தன் நலம் என்று வாழ்ந்த மாமனிதர், பிராமணரல்லாத மக்களின் வாழ் வியல் உரிமைகளுக்காகத் தம் வாழ்நாள் முழுவதும் உழைத்த உத்த மர் டாக்டர் சி. நடேசன் அவர்கள், திராவிட இயக்கத்தின் முன்னோடித் தலைவர்களில் முதல்வராகத் திகழ்ந்த வர். திருவல்லிக்கேணி பெரிய தெரு எனப்படும் வீரராகவ முதலியார் தெரு வில் வாழ்ந்த கிருஷ்ணசாமி முதலியாரின் புதல்வ ராக, 1875இல் நானிலம் போற்றும் நடேசன் பிறந்தார். திருவல்லிக்கேணியில் தொடக்கப் பள்ளியில் பயின்ற அவர் சென்னைப் பல்கலைக்கழகத் தில் இளங்கலை (BA) பட்டம் பெற்றார். பின்னர், ஆர். வெங்கடரத்தினம் நாயுடு தலைமையில் நடந்துவந்த பித்தாபுரம் மகாராஜ கல்லூரியில் உடலியல் (Physiology) விரிவுரையா ளராகச் சிறிது காலம் பணியாற்றினார். மருத்துவச் சேவை ஏழை எளியோர்க்குத் தொண்டு புரிய வேண்டும் என்ற எண்ணம் அவரிடம்  மேலோங்கி நின்றது. சேவை புரிதற்குரிய துறை மருத்துவத் துறை என உணர்ந் தார். சென்னை ம...